ஒதுக்காதே! ஒடுக்காதே!
ஒருநாள் பாரதியார் வீட்டுக்குச் சென்றிருந்தேன். என்னைக் கண்டதும் பாரதியார், "உனக்குத் தம்பலா வீடு தெரியுமா?' என்று கேட்டார்.

"தெரியும்!" என்றேன்.

"அப்படியானால் அந்த வீட்டுக்குப் போய் வருவோம்..." என்றார்.

நான் திடுக்கிட்டுப் போனேன்.

புதுச்சேரியில் தோட்டி சமூகத்திற்கு தலைவராக விளங்கினார் தம்பலா. அவர் சாராயக் கடை, கஞ்சாக் கடை இவைகளைக் குத்தகை எடுத்துப் பொருள் சம்பாதித்தவர். 1906ம் ஆண்டில் நடைபெற்ற, "லெமேர்" தேர்தலில் அவர் வோட்டர்களை பயமுறுத்தியது பிரசித்தமான செய்தி. அக்காலத்தில், புதுவையில் தம்பலா என்றால், அழுத பிள்ளை வாய் மூடும் என்பர்.

தம்பலாவின் வீட்டுக்குச் சென்றதும், அவ்வீட்டின் ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்து கொண்டார் பாரதியார். அவர் (தம்பலா) பாரதியாரைக் கண்டவுடன் வரவேற்று, தாழ்மையுடன் கும்பிடு போட்டு நின்றார். தமக்கு எதிரேஇருந்த ஒட்டுத் திண்ணையில் தம்பலாவை உட்காரச் சொன்னார் கவிஞர். பாரதியார் எவ்வளவோ வற்புறுத்தியும் கேளாமல், தோளில் போட்டிருந்த துண்டை விரித்துப் போட்டுத் தரையிலே உட்கார்ந்து கொண்டார் அவர்.

"நான் யார் தெரியுமா?" என்று கேட்டார் பாரதியார்.

தம்பலா, "தெரியுங்கோ! நீங்கள் சுதேசிங்கோ!" என்றார்.

"அப்படியானால் நீர் பரதேசியா?" என்று பாரதியார் பளிச்சென்று கேட்டார்.

கடைசியாக, "உம்முடைய வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு உம்மிடம் இரண்டொரு வார்த்தையாவது பேச வேணும் என்ற அவா இருந்தது; இன்று பூர்த்தியாகி விட்டது. நாங்கள் போய் வருகிறோம்!" என்று எழுந்தார் பாரதியார்.

அப்படிப் பிரிந்துவிட மனமில்லாதவர் போல், தம்பலாவும் எங்களுடன் கொஞ்ச தூரம் ரஸ்தா வரையில் வந்து, பாரதியாருக்கு நமஸ்காரம் செய்து விட்டுத் திரும்பினார்.

அப்போது பாரதியார், என்னை நோக்கி, "கனகலிங்கம்... தம்பலா நம்மிடம் எவ்வளவு நல்லவனாக நடந்து கொண்டான் பார்த்தாயா? தேர்தல் காலங்களில் ஜனங்களை அடிப்பதும், இம்சிப்பதுமாய் இருந்தான் என்று கேள்விப்பட்டுத்தான் நான் இவனிடம் சினேகம் செய்ய மனமில்லாமல் இருந்தேன்!" என்று சொன்னார்.

எந்தக் காரணத்தை முன்னிட்டும் சிலரை ஒதுக்கி வைப்பது தவறு என்று பாரதியார் கருதினார். ஒதுக்கி வைப்பதோ, ஒடுக்கி வைப்பதோ அவர்களுக்கும் கேடு, பிறருக்கும் கேடு என்பது பாரதியாரின் கொள்கை.

- ரா. கனகலிங்கம் எழுதிய 'என் குருநாதர் பாரதியார்' நூலிலிருந்து...

© TamilOnline.com