இரு முகில்கள்
இரண்டுமே அவசரமாகப் போய்க் கொண்டிருந்தன. மேலே மோதியதும் ஒன்று மற்றொன்றைப் பார்த்தது. அவை இரு முகில்கள்!

வெண்மேகம் மென்மேலும் போய்க் கொண்டிருந்தது; கருமுகில் தாழத்தாழ வந்து கொண்டிருந்தது.

வெண்முகில் கருமுகிலை அசட்டையாகப் பார்த்து கணப்பொழுது கழித்து, "எங்கேயடா புறப்பட்டாய்?" என்று கேட்டது.

"மண்ணுலகிற்குப் போகிறேன். நீ எங்கே போகிறாய்?"

"சொர்க்கத்திற்கு..."

வெண்மேகம் ஆகாய விமானத்தைப் போல மென்மேலும் பறக்கலாயிற்று. கருமுகில் உடைந்த ஆகாய விமானத்தைப் போல 'விர்' என்று கீழே இறங்கலாயிற்று.

வெண்முகில் பெருமிதத்தோடு பின்னால் திரும்பிப் பார்த்தது.

அந்தக் கருமுகில்தான் எவ்வளவு அழகு! அதிலே பளிச்சென்று ஒளிவீசும் அந்த மின்னல் - அது தெய்வீகக் காட்சி!

வெண்முகில் ஏமாற்றத்தோடு தன்னைப் பார்த்துக் கொண்டது. மின்னலின் லேசான தோற்றங்கூட அதனிடம் தென்படவில்லை.

அது ஆவலோடு மேலே பார்த்தது. விரைவிலேயே தான் விண்ணுலகில் நுழையப் போகும் மகிழ்ச்சியில் கருமுகிலிற்றோன்றிய அந்தத் தெய்வீக ஒளியை அது மறந்து விட்டது.

சிறிது நேரத்திற்கெல்லாம் அது திரும்பிக் கீழே பார்த்தது.

கருமுகில் எங்குமே தென்படவில்லை. பூமி மட்டும் ஸ்நான அறையிலிருந்து வெளிவரும் இளம் பெண்ணைப்போலத் தோன்றியது.

மரங்களில் வளைந்த கொடிகள் கிச்சுக்கிச்சு மூட்டிய குழந்தைகளைப் போல நகைத்தன. பறவைகள் மரக்கிளைகளில் உட்கார்ந்து தங்கள் உடலைச் சிலிர்த்துக் கொண்டன.

வெண்முகில் சொர்க்க வாசலுக்கே போய்ச் சேர்ந்தது. தான் உள்ளே சுலபமாகப் போய்விடலாம் என்று அது எண்ணியிருந்தது.

ஆனால் காவலாளி அதை உள்ளே நுழைய விடவில்லை.

"உள்ளே ஒரே ஓரிடந்தான் காலியாக இருந்தது. இப்பொழுது அது நிரம்பிவிட்டது" என்று அவன் சொன்னான்.

தன் பின்னால் வந்த பல வெண்முகில்களை இந்த வெண்முகில் வழியில் பார்த்திருந்தது. அது நினைவிற்கு வந்ததும், "எல்லாம் நமக்குப் பின்னால் வந்தனவே தவிர, முன்னால் ஒன்றுகூட இல்லையே!" என்று அது நினைத்தது. அதற்கு ஒரே திகைப்பாக இருந்தது. "சொர்க்கத்தில் இருந்த அந்த இடம் யாருக்குக் கிடைத்தது" என்று அது கேட்டது.


"ஒரு கருமுகிலுக்கு!" என்று காவலாளி சொன்னான்.

"கருமுகிலுக்கா?"

"ஆம்! வெப்பத்தால் கொதித்த மண்ணுலகைக் குளிர்விப்பதற்காக அது தன் வாழ்க்கையை—தன்னிடமுள்ள அனைத்தையும்—கொடுத்து விட்டது!" என்று ஆகாயவாணி பேசியது.

- (வி.எஸ். காண்டேகர் எழுதிய 'வெண்முகில்' என்ற நாவலில் வரும் உருவகக்கதை. மொழிபெயப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ.)

© TamilOnline.com