கோழிக்குஞ்சு மாப்பிள்ளை
எனது பாட்டனார் நல்லசிவத்தின் மனைவியான பிரமு பாட்டியார் திருநெல்வேலி மாவட்டக் கடற்கரையில் குண்டல் என்னும் ஊரில் கணக்குப் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர். பாட்டனாரின் மறைவின்போது நாங்கள் எல்லோரும் குண்டல் சென்று திரும்பிய காட்சிகள் இன்னும் என் நினைவில் உள்ளன.

பாட்டி உறவுடைய ஒருவர் அங்கே எனக்கு தோசை வார்த்துச் சிவப்பாக ஏதோ ஒன்றை உடன் வைத்தனர். அது என்னவென்று கேட்டபோது பாட்டி 'இளநீர்' என்றார். அதன் சுவை நாக்கில் பதிந்துவிட்டது. ஊர் திரும்புகையில் தந்தை, தாயாரிடம் இளநீர் வேண்டுமென்று கேட்டு அடம்பிடித்தேன். ஆனால் கொடுத்த இளநீர் நான் விரும்பிய பொருளாய் இல்லை. ஊருக்கு வந்த பின்னும் பல நாள் இதுவகையில் குடும்பத்துக்குத் தொல்லையாகவும் எனக்கு ஏக்கமாகவும் கழிந்தன.

ஒருநாள் தோசைக்கு பதநீர் வைக்கப்பட்டது. ஆரல்வாய்மொழிப் பாட்டி "அதைக் காய்ச்சிக் கொடு" என்றார். காய்ச்சிய பதநீர் 'கூழ்பதநீர்' என்ற பெயரில் குருதிச் சிவப்பாக இருந்தது. இதுதான் செவ்விளநீர் என்று நான் குதித்தேன். என் ஆசை தீர்ந்தது!

பாட்டி இன்னொரு வேடிக்கை செய்திருந்தாள். 'போளி' என்றொரு சிற்றுண்டி எனக்குத் தரப்பட்டது. ஆனால் அச்சொல் என் காதுக்கு 'கோளி' என்று புலப்பட்டது. அதை நான் 'கோழி' என்றே நினைத்துக் கொண்டேன். அந்தச் சிற்றுண்டி மெதுத்தன்மை உள்ளபடியால் இளங்கோழிக்குஞ்சு மென்மையையே நினைவூட்டிற்று.

வழியில் நான் கோழி, கோழிக்குஞ்சு வேண்டுமென்று கேட்டது எல்லோரிடமும் நகைச்சுவையையும், அருவருப்பையும் ஏற்படுத்தியது. நான் 'கோழிக்குஞ்சு' என்று கேட்டது, போளியையே என்பதைக் குடும்பத்தினர் கண்டறிய உண்மையில் சில ஆண்டுகள் ஆயின. அத்தை குடும்பத்தினர் நெடுநாள் என்னை 'கோழிக்குஞ்சு தின்னும் மாப்பிள்ளை' என்றே கேலி செய்து வந்தனர்

- "முகம்" மாமணி அவர்கள் எழுதிய "அறிவுச்சுரங்கம் அப்பாத்துரையார்" நூலிலிருந்து.

© TamilOnline.com