பரதநாட்டியம்: அபூர்வா பரந்தாமன்
மார்ச் 22, 2014 அன்று ஹூவர் அரங்கத்தில் ஸ்ரீக்ருபா நாட்டியப் பள்ளி மாணவி அபூர்வா பரந்தாமனின் நாட்டிய நிகழ்ச்சி, நலிந்தோர்க்கு உணவு வழங்கும் Marthaa's Kitchen அமைப்புக்கு நிதி திரட்டும் பொருட்டு நடைபெற்றது. நாட்டியத்தின் கதாநாயகனாக ஸ்ரீராமன் சித்திரிக்கப் பட்டிருந்தார். முதல் நடனமான தர்மத்தின் வெற்றியைக் கொண்டாடும் மல்லாரியில், வெற்றி ஊர்வலத்தின் பரவசத்தை நன்றாக வெளிக் கொணர்ந்தார் அபூர்வா. தொடர்ந்து வந்தன மஹாராஜா ஸ்வாதித் திருநாளின் 'பாவயாமி ரகுராமம்' மற்றும் மதுரை என். கிருஷ்ணனின் தில்லானா. ஒரே நாளில் இந்த நிகழ்ச்சி இருமுறை நடைபெற்றது.

நிகழ்ச்சி மூலம் சுமார் 3000 டாலர் திரட்டப்பட்டு மார்த்தாஸ் கிச்சன் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் 250,000க்கும் மேற்பட்ட நலிந்தோர்க்கு உணவு, உடை வழங்குகின்றது. இச் சிறுவயதில் தன் கலை மூலமாகச் சமூக சேவை செய்யும் அபூர்வா தனக்கும், தன் குடும்பத்துக்கும், குருவுக்கும் பெருமை சேர்த்துள்ளார். ஸ்ரீக்ருபா நாட்டியப் பள்ளியைத் தொடங்கி நடத்திவரும் குரு விஷால் ரமணி அவர்கள் அவர்களுக்கு ஏப்ரல் மாதம் க்ளீவ்லேண்டில் 'நிருத்திய சேவாமணி' பட்டம் வழங்கி கெளரவித்துள்ளனர்.

வெங்கட் ராமகிருஷ்ணன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com