டாலஸ்: தமிழ் இசை விழா
ஏப்ரல் 12, 2014 அன்று டாலஸ் (டெக்சஸ்) நகரில் அவ்வை தமிழ் மையம் தமிழ் இசை விழாவை லிபர்டி உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் நடத்தியது.

அவ்வை தமிழ் மையம் லாப நோக்கற்ற, தமிழ்க் கல்விக்கான தொண்டு நிறுவனமாகும். குழந்தைகளின் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் மேடையாக இவ்விழா நடத்தப்பட்டது. 5 முதல் 17 வயதுவரை உள்ள குழந்தைகள், இளையோர் கிட்டத்தட்ட120 பேர், குழுவாகவும், தனியாகவும் மொத்தம் தமிழிசைப் பாடல்களைப் பாடினர்.

பகல் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. மையத்தின் தலைவர் திரு. விவேக் வாசுதேவன் வரவேற்றார். பிறகு பாவேந்தரின் 'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாடல் இனிமை தந்தது. நகரின் பல்வேறு இசைப் பள்ளிகள், இசைக்குழுக்கள் சார்ந்த குழந்தைகள் 4 மணி நேரம் இடைவிடாமல் இசைமழை பொழிந்தனர். பக்திப் பாடல்கள், சங்க இலக்கியப்பாடல்கள், இசைப்பாடல்கள், பாரதியார், பாரதிதாசன், வேதாத்திரி மகரிஷி பாடல்கள், தேவாரம், திருவாசகப் பாடல்களோடு கோஸ்பல் தேவாலய இசைக்குழுவைச் சேர்ந்த சிறுவன் பாடிய கிறித்தவக் கீர்த்தனை என்று பல்சுவை விருந்தாக அமைந்தது.

பாடிய அனைத்துக் குழந்தைகளுக்கும் பெயர்கள் பொறிக்கப்பட்ட பரிசுக் கோப்பைகள் வழங்கப்பட்டன. கோப்பைகளை டாலஸ் தமிழ்ச் சங்கத் துணைச்செயலர் திரு. இளங்கோவன் சிங்காரவேலு, முன்னாள் தலைவர் திருமதி. கலை நாயகம், பிளேனோ தமிழ்ப்பள்ளி நிறுவனர் திரு. வேலு ராமன், அவ்வை தமிழ் மையத்தின் மூத்த தமிழ் ஆசிரியர் திருமதி. சாந்தா இராகவேந்திரன் ஆகியோர் வழங்கினர். அவ்வை தமிழ் மையச் செயலாளர் திரு. மோகன் தண்டபாணி நன்றியுரை ஆற்றினார். விழா நிகழ்வுகளை தமிழ் மைய ஆசிரியை திருமதி. அனிதா சங்கர் மற்றும் தன்னார்வலர் திருமதி. உமா விவேக் தொகுத்து வழங்கினர்.

இணையதளம்: avvaitamil.org

சௌந்தர் ஜெயபால்,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com