அரங்கேற்றம்: சமீஹிதா மோஹன்
ஏப்ரல் 13, 2014 அன்று செல்வி. சமீஹிதா மோஹனின் பரதநாட்டிய அரங்கேற்றம் சான்ட கிளாரவில் உள்ள மிஷன் சிடி நிகழ்கலை மையத்தில் நடைபெற்றது. குரு திருமதி. மீனா லோகன் அவர்களின் புஷ்பாஞ்சலி டான்ஸ் அகாடமியில் பயின்றவர் சமீஹிதா. புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி அடுத்து 'ஸ்ரீமன் நாராயண' என்ற அன்னமாசார்யா கிருதிக்கு ஆடினார்.

பின்னர் வந்த சாருகேசியில் அமைந்த லால்குடி ஜயராமன் வர்ணத்துக்கு ஜதீஸ்வரம் ஆடிய சமீஹிதாவின் முகபாவங்களும் பாத வேலையும் சிறப்பாக இருந்தன. பாபநாசம் சிவனின் 'ஆடும் தெய்வம்', 'வில்லினை ஒத்த புருவம்' என்ற பாரதியின் காவடிச்சிந்து, கீரவாணியில் 'தேவி நீயே துணை' ஆகியவற்றுக்குப் பின்னர், பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் கதனகுதூகல ராகத் தில்லானாவுக்கு விறுவிறுப்பாக ஆடி நிறைவு செய்தார் சமீஹிதா. நிகழ்ச்சியின் இறுதியில் மீனா லோகன் அவருக்கு 'நாட்டியக் கலையரசி' என்ற பட்டத்தை வழங்கினார்.

குரு மீனா லோகன் (நட்டுவாங்கம்), திருமதி. ஜயந்தி உமேஷ் (பாட்டு), திரு. ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), திருமதி. லக்ஷ்மி பாலசுப்ரமண்யா (வயலின்) ஆகியோரின் பக்கம் வெகு சிறப்பாக அமைந்திருந்தது.

© TamilOnline.com