SFO விரிகுடாப் பகுதி: முப்பெரும் விழா
ஜூன் 7, 2014 அன்று நடக்கவிருக்கும் முப்பெரும் விழாவில் முக்கியமான அங்கமாக அமைகின்றது 'சுதேசி ஐயா'. காந்தியை இந்தத் தலைமுறை சதையும் ரத்தமுமான மனிதராகப் பார்த்தால் என்ன ஆகும் என்று நினத்துப் பார்ப்பதுதான் ஒய்.ஜீ. மகேந்திராவின் 'சுதேசி ஐயா' நாடகம்

இவ்விழா கேரிங்டன் அரங்கில் (Sequoia High School, Redwood City, CA) நடைபெறும். அக்ஷயா அறக்கட்டளை (Akshaya Trust), இந்தியா லிடரஸி புராஜக்ட் (ILP) ஆகிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டவும், விரிகுடா வாழ் இந்தியர்களுக்குச் சிறப்பான பொழுதுபோக்கு நிகழ்வைத் தரவும் வருகிறது முப்பெரும் விழா. இதில் 'சுதேசி ஐயா' நாடகத்துடன், இளையராகம் வழங்கும் 'Invoked' மெல்லிசையும், Amateur Artists of Bay Area (AABA) வழங்கும் 'காசி அல்வா' நகைச்சுவைக் குறுநாடகமும் இடம்பெறும்.

அக்ஷயா அறக்கட்டளை:
ஆதரவற்றோருக்குப் புகலிடமும், உணவும், கௌரவமான வாழ்க்கையும் தரும் பொருட்டாக அக்ஷயா டிரஸ்டைத் திரு. நாராயணன் கிருஷ்ணன் 2003ல் நிறுவினார். பத்தாண்டுகளில் அக்ஷயா ஒரு நிழல் தரும் ஆலவிருக்ஷமாக விரிவடைந்துள்ளது. 1000க்கும் மேற்பட்டோர் இதன் நிழலில் புத்துயிர் பெற்றிருக்கிறார்கள். இவர்களில் சுமார் 500 பேர் மருத்துவ உதவியுடன் மறுவாழ்வு பெற்று உற்றார் உறவினரிடம் சேர்க்கப் பட்டுள்ளனர். மேலும்,

CNN நிறுவனம், திரு கிருஷ்ணன் அவர்களை உலகின் பத்து தலையாய உன்னத மனிதரில் ஒருவராக (Top 10 CNN Heroes) தேர்ந்தெடுத்துப் பாரட்டியுள்ளது. இன்று அக்ஷயாவின் சேவையால், ஆதரவற்ற முதியோரையோ, மனநலம் குன்றியோரையோ மதுரை மாவட்டத்தில் எங்கும் காணமுடியாது என்கின்ற நிலை உருவாகியுள்ளது. இதனைப் பிற மாவட்டங்களிலும் செய்ய அக்ஷயா திட்டமிட்டுள்ளது.

இந்தியா லிடரஸி புராஜக்ட்:
இது 1990ம் ஆண்டு அமெரிக்க இளந்தலைமுறை இந்தியர்களால் துவங்கப்பட்டது. இவர்களுக்குப் பின்னே இருந்தவர் டாக்டர் பரமேஷ்வர் ராவ் எனும் அணு விஞ்ஞானி. அவர் 1967ல் இந்தியாவிற்குத் திரும்பி, கிராம மக்களின் வாழ்வை மேம்படுத்துவதற்கென்றே தம்மை அர்ப்பணித்துக் கொண்டார். அமெரிக்காவில், வெங்கி வெங்கடேஷ் மற்றும் தொண்டர்களும் இந்தியாவில் பல நலத் திட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் 100 சதவீதம் கல்வியறிவுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. உதாரணமாக, தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில், பூந்தமல்லி தொகுதியில் சுமார் 100 செங்கல் சூளைகளில் 14,400 குடும்பங்கள் வேலை செய்கின்றன. இவற்றில் 3 முதல் 5 வயதுக்குட்பட்ட 1000 குழந்தைகளும், 6 முதல் 14 வயதுக்குட்பட்ட 800 குழந்தைகளும் வேலை செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. ILPயின் உதவியுடன், IRCDS என்னும் அரசுசாரா தொண்டு நிறுவனம், இந்தக் குழந்தைகளுக்குப் பள்ளி செல்லும் வாய்ப்பை அமைத்துத் தரும் திட்டப்பணியை நிர்வகித்து வருகிறது. இதன் தாக்கத்தினால் ஈர்க்கப்பட்ட தமிழக அரசாங்கம் மாநிலம் முழுதும் சுமார் 3000 செங்கல் சூளைகளில் இந்தத் திட்டப்பணியை செயல்படுத்த ஆணை பிறப்பித்துள்ளது.

முப்பெரும் விழாவைக் கண்டு, கேட்டுக் களிக்கும்போது நீங்கள் இவ்விரண்டு உன்னதமான பணிகளையும் மேலே கொண்டுசெல்ல உதவுகிறீர்கள் என்பதை நினைவில் வையுங்கள்.

நுழைவுச்சீட்டுகளுக்கு: Sulekha.com/YGM

நன்கொடை தர:
அக்ஷயா அறக்கட்டளை: AkshayaUSA.org.
இந்தியா கல்விப் பணித்திட்டம் - ilpnet.org
முகநூல் - Swadeshi Ayya

உமா வெங்கட்ராமன்,
மௌண்டன் வியூ, கலிஃபோர்னியா

© TamilOnline.com