தென் கரோலினா: பொங்கல் விழா
ஃபிப்ரவரி 1, 2014 அன்று தென் கரோலினா தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவைக் கொலம்பியா நகரில் கொண்டாடியது. சிறுவர்களே நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கவிட்டமை நிகழ்வுக்கு மெருகேற்றியது. தமிழ்ப் பள்ளி மாணவர்களது தமிழ்த்தாய் வாழ்த்துடனும் அமெரிக்க தேசிய கீதத்துடனும் நிகழ்வுகள் ஆரம்பித்தன. கலைநிகழ்வுகளின் பொறுப்பாளர் வனிதா வெங்கட் வரவேற்புரை வழங்கினார்.

இந்திரா குகானந்தாவின் அமைப்பில் 'விஷமக்காரக் கண்ணன்' பாடலுக்கு கிராமிய நடனத்துடன் ஆரம்பமே களைகட்டியது. பல்வேறு பக்திப் பாடல்கள், சினிமாப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றுக்கான நடனங்களைத் தொடர்ந்து 'மாயாண்டியின் குடும்பம்' என்னும் பொங்கல் சிறப்பு நிகழ்வில் உழவு, நடவு, மழை வேண்டுதல், கும்மிப்பாட்டு, அருவி வெட்டுதல், போகிப் பண்டிகை, தைப்பொங்கல், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகளை நடனமாடியும் நடித்துக் காட்டி தமிழ்நாட்டை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்தனர். மீண்டும் கும்மி, கோலாட்டம் உட்படப் பலவகை நடனங்கள் தொடர்ந்தன. இந்திய தேசியகீதத்துடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.

கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன்,
தென் கரோலினா

© TamilOnline.com