டாலஸ்: STF தமிழ் ஆராதனை
ஃபிப்ரவரி 22, 2014 அன்று ஃப்ரிஸ்கோ உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் 'தமிழ் ஆராதனை விழா' நடைபெற்றது அவ்வை அமுதம், பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி மற்றும் திருக்குறள் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினராக திரு. ஜெய் விஜயன் (CIO, டெஸ்லா மோட்டார்ஸ்) பங்கேற்றார்.

திருக்குறள், மூதுரை, கொன்றை வேந்தன் மற்றும் பேச்சுப்போட்டிகளில் முதல் பரிசுகளை 14 வயது சீதா தட்டிச் சென்றார். அமெரிக்காவிலே பிறந்து வளர்ந்த இவர் 505 குறள்களை அனாயசமாகச் சொல்லி புதிய சாதனை படைத்தார். அடுத்த ஆண்டு 1330 குறள்களையும் படித்துவிடுவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார். திருக்குறள் போட்டியில் 153 குழந்தைகள் பங்கேற்றுக் குறள்களை ஒப்பித்துள்ளனர். மழலைப் பிரிவில் பங்கேற்ற இனியா, திருக்குறள், ஆத்திச்சூடி, மூதுரை ஆகிய மூன்று போட்டிகளிலும் பரிசுகளை வென்றாள். 405 குறள்களைச் சொல்லி அதிகபட்ச பரிசுத்தொகையான 327 டாலர் பெற்றார் மிதுன். பங்கேற்ற நான்கு போட்டிகளிலும் பரிசுகளை வென்றார் தர்ஷிணி.

பேச்சுப் போட்டியில் 25 பேர், கட்டுரைப் போட்டியில் 15 பேர், அவ்வை அமுதம் போட்டியில் 75 பேர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர். கீதா பாண்டியன், டாக்டர். ராணி அன்பரசு, டாக்டர் லதா வேலுச்சாமி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். முதன்முறையாகக் கணிணிமூலம் நடைபெற்ற இந்தப் போட்டிக்கான மென்பொருளை வடிவமைத்த Sumtwo நிறுவனத்தின் திரு. கண்ணன் சில பரிசுகளை வழங்கினார்.

திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரக் குறள்களைக் கொண்ட பாடலுக்கு புவனாவின் இயக்கத்தில் குழந்தைகள் நடனம் ஆடினர். அவ்வை அமுதம் குறித்தும். ஏன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன என்பது குறித்தும் டாக்டர் தீபா, விவேக், பழநிசாமி, முனைவர் சித்ரா, உமா, ஜெய்சங்கர் ஆகியோர் எடுத்துரைத்தனர். டி. ராஜேந்தர் பேட்டி காண்பது போலவும் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி உள்ளிட்ட நட்சத்திரங்கள் திருக்குறள் கூறுவது போலவும் வீடியோவுடன் கூடிய மிமிக்ரி காட்சி ஒளிபரப்பப்பட்டது. திரைப்படங்களில் திருக்குறள் என்ற தலைப்பில், வெவ்வேறு திரைப்படங்களின் பாடல் காட்சிகளும் ஒளிபரப்பப்பட்டது.

சிறப்பு விருந்தினர் ஜெய் விஜயன் அறக்கட்டளையின் தமிழ்ப் பணிகள் குறித்துப் பாராட்டினார். பெரியவர்கள் பிரிவில் 1330 குறள்களையும் சொல்லி சாதனை படைத்த கீதா அருணாச்சலத்திற்கு சிறப்புக் கேடயம் வழங்கி கவுரவித்தார். முன்னதாக, நிலை மூன்று பிரிவில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு வளர்மதி ஜெய் பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்புப் பணிகளை டாக்டர் ராஜ் தலைமையில் தன்னார்வத் தொண்டர்கள் செய்திருந்தனர். ஜெய்சங்கர் வரவேற்புரை ஆற்றினார். ராஜி பிரபாகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். அறக்கட்டளை இயக்குனர்கள் வேலு ராமன், விசாலாட்சி வேலு நன்றியுரை வழங்கினார்கள்.

தகவல்: சின்னமணி, டாலஸ்
புகைப்படங்கள்: சுதீர் & விஜய்

© TamilOnline.com