கணிதப் புதிர்கள்
1) தாத்தா ஒரு பெட்டியில் சில மாம்பழங்களை வைத்திருந்தார். அவரிடம் வந்த பேரன் மாம்பழங்கள் தருமாறு கேட்டான். அவனுக்கு ஒரே ஒரு மாம்பழத்தை மட்டும் தந்த தாத்தா, "இந்தப் பெட்டியில் உள்ள மாம்பழங்களையும், அதைப் போலப் பத்து மடங்கையும், அதில் பாதியையும், பெட்டியில் உள்ள மாம்பழங்களில் பாதியையும், உன் கையில் இருப்பதைப் போல் இருமடங்கையும் சேர்த்துக் கூட்டினால் மொத்தம் இருநூறு வரும். அப்படியானால் பெட்டியில் எத்தனை மாம்பழங்கள் உள்ளன என்று சொல். இவை அனைத்தையும் உனக்கே தந்து விடுகிறேன்" என்றார். சிறிது நேரம் யோசித்த பேரனும் சரியான விடையைச் சொல்லிவிட்டான். உங்களால் முடிகிறதா?

2) அது ஒரு மூன்று இலக்க எண். அந்த எண்ணிலிருந்து அதன் தலைகீழ் எண்ணைக் கழித்தால் வரும் விடை அதே மூன்று இலக்க எண்ணின் மாறு வரிசையில் அமைந்திருக்கிறது. அந்த எண் எது?

3) ராதாவின் வயதையும் அவள் தம்பியின் வயதையும் கூட்டினால் வரும் கூட்டுத் தொகை 32. ராதா வயதின் இரண்டடுக்கையும் அவள் தம்பி வயதின் இரண்டடுக்கையும் கூட்டினால் 544 வருகிறது. ராதாவின் வயதை விட அவள் தம்பியின் வயது எட்டு வருடம் குறைவு என்றால் ராதாவின் வயது என்ன, அவள் தம்பியின் வயது என்ன?

4) 7, 7, 8, 6, 9, ... ? வரிசையில் அடுத்து வரும் எண் எது, ஏன்?

5) ஒரு பண்ணையில் சில பசுக்களும் சில கோழிகளுமாகச் சேர்த்து மொத்தம் 20 இருந்தன. அவற்றின் கால்களின் எண்ணிக்கை 74 என்றால் பசுக்கள் எத்தனை, கோழிகள் எத்தனை?

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com