அழுத்தம் குறைந்தால் ஆயுள் நீளும்
முன்பெல்லாம் 40 வயதுக்கு மேலானோரைத் தாக்கிவந்த உயர் ரத்த அழுத்தம், இப்போது இளவயதினரையும் தாக்குகிறது. பதினெட்டு வயதுக்குமேல் ஆனவர்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கிறதா என்ற பரிசோதனை அவசியம். அறிகுறிகளே இல்லாமல் ரத்த அழுத்தம் அகிகமாகலாம் என்பதால் இதை ஒரு மௌனக் கொல்லி என்று அழைப்பதுண்டு. ஒரு சிலருக்குத் தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும், பெரும்பாலும் ரத்த அழுத்தம் ஒருவித அறிகுறியும் இல்லாமலே வரக்கூடும்.

ரத்த அழுத்தம் என்றால் என்ன?
நமது ரத்த நாளங்களில் ரத்தம் ஓடும்போது உண்டாகும் அழுத்தமே ரத்தஅழுத்தமாக கணிக்கப்படுகிறது. இது இதய சுருக்கத்தில் Systolic என்றும், விரியும்போது Diastolic என்றும் அழைக்கப்படுகிறது. இதயத் துடிப்பின் காரணமாகவும், ரத்த நாளங்கள் விரிந்து சுருங்குவதாலும் ஏற்படுகிறது. இதனால், இதயம் துடிக்கும் வேகத்தினாலும், துடிக்கும் அழுத்தத்தினாலும் வேறுபடும். இது நிமிடத்திற்கு நிமிடம் வேறுபடும். ஆனால் 5 முதல் 10 mmhg வேறுபடுவது ஏற்கப்படலாம். அதற்கு மேல் கணிசமாக வேறுபடுவது நல்லதல்ல.

தற்சமயம் Joint National Commission ஒரு புது அறிக்கையை (JNC 8) வெளியிட்டுள்ளது. இதன்படி 60 வயதுக்கு அதிகமானோருக்கு 150/90 இருந்தால் மட்டுமே மருந்துகள் தேவை. 60 வயதுக்குக்கு உட்பட்டோருக்கு 140/90 மேல் இருந்தால் மருந்துகள் தேவை என்று இவ்வாறு தளர்த்தப் பட்டுள்ளது.

ரத்த அழுத்தம் அதிகமாவதன் விளைவுகள்
* இருதயம் பழுதடைதல்
* மாரடைப்பு ஏற்படுதல்
* சிறுநீரகம் பழுதடைதல்
* பக்கவாதம் ஏற்படும் அபாயம்
* பார்வை பாதிக்கப்படுதல்

இந்த அபாயங்கள் அறிகுறிகளே இல்லாமல் திடுமென்று ஏற்படும் காரணத்தால் வருடா வருடம் முதன்மை மருத்துவரிடம் சென்று ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்வது நல்லது. வீட்டிலேயே ரத்த அழுத்தப் பரிசோதனை செய்யும் கருவி மூலமும் சரி பார்த்துக் கொள்ளலாம். என்ற போதும் வருடத்தில் ஒரு முறையாவது மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள், மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் இதைச் செய்தாக வேண்டும். வயது அதிகமாகும் போது, ரத்த நாளங்களின் தன்மையும் இருதயத் துடிப்பும் வேறுபடுவதால் இது ஒரு வளரும் நோய் என்பதை உணர வேண்டும். ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்த பின்பு, மருந்துகளை நிறுத்தி விடக் கூடாது. தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.

யாருக்கு வரும்?
உயர் ரத்த அழுத்தம் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குறிப்பாகக் குடும்ப வரலாறு உள்ளவர்கள் கண்காணிக்க வேண்டும். உடல் பருமன் அதிகமாக இருப்போரும், உணவில் அதிக உப்புச் சேர்த்துக் கொள்பவர்களும், அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டும். புகை பிடிப்போருக்கும், மன அழுத்தம் அதிகம் கொண்டவருக்கும் ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.

குடும்ப வரலாறு உள்ளவர்கள் உடல் மெலிந்து இருந்தாலும், ரத்த அழுத்தம் அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு. இதைத் தவிர வலி மருந்துகள் அதிகம் உண்டாலோ, கருத்தடை மருந்துகள் உண்டாலோ, சிறுநீரகம், அட்ரினல் நாள சுரப்பி சரியாக வேலை செய்யாவிட்டாலோ ரத்த அழுத்தம் அதிகரிக்கலாம்.

மருத்துவரின் அலுவலகத்தில் மட்டும் ரத்த அழுத்தம் மிக அதிகமாக இருப்பதும், மற்ற நேரங்களில் குறைவாக இருப்பதும் ஒரு சிலருக்குக் காணப்படும். இதை White Coat Hypertension என்று அழைப்பர். மருத்துவரைக் காணும்போது ஏற்படும் படபடப்பால் இப்படி நேரலாம். இவர்கள் வீட்டில் இருக்கும் வேளையில் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்த வகை ரத்த அழுத்தம் இருப்போருக்கு, அவரவர் குடும்ப வரலாறு, பின் விளைவுகளுக்கான சாத்தியக் கூறுகள் வைத்துத் தீர்வுமுறை நிர்ணயிக்கப்படும்.

வாழ்முறை தீர்வு
இவற்றை Lifestyle changes என்று சொல்வோம். இது ரத்த அழுத்தத் தீர்வு முறைகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்வது அவசியம். இது உடல் பருமனைக் குறைக்க உதவும். உடல் பருமனாக இல்லாவிட்டாலும், உடற் பயிற்சி செய்வது தசைகளையும், இதயம் வலுவடையவும் உதவும். நடைப் பயிற்சி நல்லது. இருதயத் துடிப்பு சீராக உதவும்.

உணவில் உப்பின் அளவைக் குறைக்க வேண்டும். ஒரு நாளைக்கு 2 கிராம் சோடியம் உட்கொள்ளலாம். இதை நிர்ணயிப்பது கடினம். தயார்நிலை உணவுப் பொருட்களில், குறிப்பாக canned foods, தவிர்ப்பது நல்லது. பதப்படுத்துவதற்காக உப்பு அதிகமாகப் போடவேண்டும். ஊறுகாயும் இதில் சேர்த்தி. காரம் அதிகமானால், உப்பும் அதிகம் தேவை. உப்பு என்ற சுவை நாமாகப் பழக்கிக் கொள்வது. உப்புக் குறைத்துச் சாப்பிடப் பழகிவிட்டால் நாவிற்கு அதிக உப்பு பிடிக்காமல் போய்விடும். உப்பு குறைவாக இருக்கும் பண்டத்தில் மேசையில் உப்பு சேர்த்துக்கொள்வது நல்லதல்ல. அதில் அதிக உப்பு சேரும் அபாயம் உள்ளது. எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கொண்டால் உப்பு குறைவாகத் தேவைப்படும். யோகாசனமும் தியானமும், மன அழுத்தத்தைக் குறைத்து ரத்த அழுத்தம் குறைய உதவும்.

மருந்துகள்
பல மருந்துகள் உள்ளன. குறிப்பாக நீரை வெளியேற்றும் Diuretics என்ற வகை கொடுப்பதுண்டு. இதைத் தவிர இருதயத் துடிப்பின் வேகத்தைக் குறைக்கும் மருந்துகளும், சிறுநீரகத்தின் ரத்தப்போக்கை மாற்றும் மருந்துகளும் வழங்கப்படலாம். இவற்றால் சில பின்விளைவுகள் ஏற்படலாம். பொட்டாசியம் அளவு குறையவோ அல்லது கூடவோ செய்யலாம். சிலருக்குத் தலைசுற்றல் வரலாம். குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு மருந்துகளின் பின்விளைவுகள் ஏற்படலாம். இந்த மருந்துகள் எடுத்துக் கொள்பவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது, சிறுநீரகம், சோடியம், பொட்டாசியம் அளவுகளை ரத்தத்தில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும். இருதயத் துடிப்பின் அளவு குறைவதாலும் சில பாதிப்புகள் வரலாம். ஒரு சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் தேவைப்படலாம். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ரத்த அழுத்தம் குறைக்க வேண்டிய கட்டாயம் உண்டு. இவர்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இருதய நோய் உள்ளவர்களும், சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களும் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

மௌனக் கொல்லியை முளையிலேயே கிள்ளி விடுவோம். வருமுன் காப்போம். வந்துவிட்டால் கண்காணிப்போம்.

மரு.வரலட்சுமி நிரஞ்சன்

© TamilOnline.com