காட்டுக் கத்தலும் காற்றின் அலைகளே!
அன்புள்ள சிநேகிதியே,

என்னுடைய வாழ்க்கையில் total incompatibility. எதற்கெடுத்தாலும் என் மனைவி கத்துகிறாள். நான் ஜாலியான பேர்வழி. அதனாலேயே பயந்துகொண்டு என் அப்பா, அம்மா நான் இங்கே மாஸ்டர்ஸ் செய்ய வரும்போது அவசர அவசரமாக என் கல்யாணத்தை நடத்திவிட்டார்கள். இந்தியப் பெற்றோர் செய்யும் 'எமோஷனல் பிளாக்மெயில்' இருக்கிறதே! I was sucked in to it. முதல் ஐந்து வருடம் திருமண வாழ்க்கை சுமாராகப் போனது. அப்புறம் யாரோ என் கல்யாணத்துக்கு முன்னால் இருந்த girl friend விஷயத்தை இவளிடம் சொல்லிவிட்டார்கள். அதைக் குத்திக் குத்திக் காட்டியே ஒரு நாலு வருஷம் என் வாழ்க்கை நரகத்தில் ஓடியது. எனக்கு ஒரு நல்ல வேலையும் சவுத்வெஸ்டில் கிடைத்தது. ஆகவே குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு இவள் தனியாக இருந்தாள். நான் குழந்தைகளை மிஸ் செய்தேன். இருந்தாலும் நல்ல வருமானம். நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். இவளோ, "குழந்தைகளை நானே single mother மாதிரி வளர்க்கிறேன். உங்களுக்குப் பொறுப்பே இல்லை" என்று சொல்லிச் சொல்லி சண்டை போடுவாள். பணம் எப்படி வருகிறது என்பதை மறந்து விடுவாள்.

முதலில் நான் அவள் ஏதாவது சண்டை போட்டால், நான் திருப்பிக் கொடுத்தால் அவளுக்கு வெறி கூடிப் போனது. அதனால் அவள் கத்த ஆரம்பித்தவுடன் நான் வீட்டைவிட்டுக் கிளம்பி விடுவேன். எங்களுக்குள் எந்தவிதப் புரிதலும் இல்லை. நான் அப்படிப் பொறுப்பில்லாதவன் அல்ல. பையன், பெண் இரண்டு பேருக்கும் ஒரு வயதுதான் இடைவெளி. அவர்கள் காலேஜ் போகவேண்டிய நிலையில் என்னுடைய நல்ல வேலையை குடும்பத்துக்காக ஒரு கிரேடு குறைந்த பொசிஷன் எடுத்துக்கொண்டு இங்கேயே வந்துவிட்டேன். இப்போது இரண்டு பேரும் காலேஜ் போய்விட்டதால் என் மனைவி குழந்தைகளை மிஸ் செய்கிறாளா? மெனோபாஸினால் அப்படிச் செய்கிறாளா? இல்லை, என் பேரில் உண்மையான கோபம் ஏதாவதா? எந்தக் கண்றாவியும் புரியவில்லை. எப்போதும் குத்தல் பேச்சுதான்.

சிலநாட்களுக்கு முன்னால் எங்கள் கல்யாண நாள். Pamper செய்யலாம் என்று மூன்றுமணி நேரம் மாலில் செலவழித்து என்ன வாங்குவது என்று புரியாமல் அவளுக்கு ஒரு office dress வாங்கினேன். "என்றுமில்லாத அதிசயமாய் என்ன வேண்டியிருக்கிறது சர்ப்ரைஸ்?" என்று அதற்கும் திட்டுக் கிடைத்தது. அதைப் பையோடு அப்படியே அதைத் திருப்பிவிட்டாள். கலர் பிடிக்கவில்லையாம். எனக்கு நண்பர்களோடு இருக்கப் பிடிக்கும். அவள் ரொம்ப சீரியஸ். யாரிடமும் எந்த வம்பும் வைத்துக் கொள்ளமாட்டாள். எப்போது பார்த்தாலும் ஏதாவது வேலை செய்துகொண்டே இருப்பாள். வம்பளக்க மாட்டாள். எங்களுக்குள் கம்யூனிகேஷன் என்பதே இல்லாமல் போய்விட்டது. பசங்கள் வேறு இல்லையா, அதனால் வீட்டுக்கு வருவதையே நான் வெறுக்கிறேன். சில நாட்களை எப்படி ஓட்டுவது என்றே தெரியவில்லை. நான் சிரித்தாலே அவளுக்குக் கோபம் வருகிறது. என்னதான் தீர்வு?

இப்படிக்கு
...................


அன்புள்ள சிநேகிதரே,

வாழ்க்கையைச் செலுத்தும் வகையில் நீங்கள் இரண்டுபேரும் இரு துருவங்களாகத்தான் இருக்கிறீர்கள் என்பது புரிகிறது. ஒருவருக்கு நகைச்சுவை உணர்வு இருந்து மற்றவருக்கு இல்லை என்றாலே அது மிகமிகக் கஷ்டம்தான். நீங்கள் எழுதியிருப்பதை வைத்துப் பார்த்தால் உங்கள் மனைவி தன் கடமையைக் கண்ணும் கருத்துமாகச் செய்கிறார். ஆனால் கடமையை ரசிக்கத் தெரிந்தால்தான் வாழ்வின் சுவை தெரியும். உங்களைப்பற்றி நான் புரிந்துகொண்ட வகையில் நீங்கள் பொறுப்பையும் சிரிப்போடு ஏற்றுக்கொள்ளப் பார்க்கிறீர்கள். அது நல்லதுதான். ஆனால் அந்தச் சிரிப்பு ஒரு அலட்சியப் பார்வையாக உங்கள் மனைவிக்குப் படுவதால் அங்கே வெறுப்புத் தெரிகிறது. எங்கோ உங்கள் நடத்தை அவருக்கு உளைச்சலை ஏற்படுத்துகிறது. அது என்ன என்பதை உங்களால்தான் கண்டுபிடிக்க முடியும். வீட்டைவிட்டு அடிக்கடி வெளியே போவது பிரச்சனையை அதிகரிக்கத்தான் செய்யும். அதற்கு பதிலாக அவர் எதற்காகவாவது கத்தினால் ஏதோ ஒரு மனக்கலக்கம் அவரைத் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது, அதற்கு வடிகால் தேடிக் கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொள்ளப் பாருங்கள். Plus, render an apology. நீங்கள் தவறு செய்தால்தான் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பதில்லை. உங்களுக்குப் பிடித்தவர்கள் எரிந்து விழுந்தால் உடலாலோ மனதாலோ ஏதோ எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் பொருள். உங்கள் அளவுக்கு அவர்களுக்கு எதையும் தாங்கும் சக்தி இருந்திருக்காது. சாந்தமாக பதில் சொல்லிப் பாருங்கள். அப்படியும் அவர் மனம் புண்படும்படிப் பேசினால் கவலைப்படாதீர்கள். தினமும் அவர் கத்துவதால் உங்களுக்கு அந்தக் கத்தல் எப்படியும் பழகிப் போயிருக்கும். So, it is just audio waves. இதுபோன்ற கருத்தை முன்பே சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். இப்போதும் சொல்கிறேன். நமக்கு நிம்மதி வேண்டுமென்றால் இதுதான் வழி.

It works wonders. Trust me.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்,
கனெக்டிகட்

© TamilOnline.com