தென்றல் சிறுகதை போட்டி 2014

தென்றல் சிறுகதை போட்டியை அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறது. நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு:

முதல் பரிசு: $300
இரண்டாம் பரிசு: $200
மூன்றாம் பரிசு: $100

நகைச்சுவை, சமூகம், அலுவலகம், அறிவியல் என்று எதைப்பற்றியும் சிறுகதைகள் எழுதலாம். சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கலாம். நல்ல தமிழில் விறுவிறுப்பாக எழுதப்பட வேண்டும். நட்பு, மனிதநேயம், கருணை, உழைப்பு, தியாகம், கொல்லாமை போன்ற உயர்பண்புகளைச் சித்திரிப்பவையாக இருத்தல் நல்லது.

ஒருவர் 3 கதைகளுக்கு மிகாமல் அனுப்பலாம்.

உலகெங்கிலும் வசிக்கும் தமிழர்கள் பங்குகொள்ள வரவேற்கப்படுகிறார்கள். இதற்கு முந்தைய போட்டிகளில் முதல் பரிசு பெற்றோர் பங்கேற்க வேண்டாம்.

சிறுகதைகள் தென்றல் இதழில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். (ஒரு நோட்பேடில் ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துருவில் சுமார் 7 கேபி ஒரு பக்கம் வரலாம்).

அனுப்புவோர் கதை(கள்) தமது சொந்தக் கற்பனையில் உருவானது, இதுவரை வேறெந்த அச்சிதழ், இணைய இதழ், வலைப்பக்கம் (பிளாக்), மின்மடல் குழு அல்லது தொகுப்பில் வெளியாகவோ, பரிசீலனைக்கு அனுப்பப்படவோ இல்லை என்று சான்றளிக்க வேண்டும். சான்றிதழ் இல்லாமல் வரும் கதைகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டா.

மின்னஞ்சல் (thendral@tamilonline.com) இணைப்பாக அனுப்புவோர் கதைகளை ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துருவில் அனுப்ப வேண்டும். மின்னஞ்சலில் அனுப்பி வைப்பதைப் பெரிதும் வரவேற்கிறோம்.

இணைப்புக் கடிதத்தில் தமது முழு அஞ்சல் முகவரியை எழுதவேண்டும்.

கையெழுத்துப் பிரதி அனுப்புவோர் தாளின் ஒருபக்கத்தில், தெளிவாக, மேலும் கீழும் போதிய இடம்விட்டு எழுதி அனுப்பவேண்டும். எல்லாப் பக்கங்களிலும் கதைத்தலைப்பு, பக்க எண் எழுதியிருக்க வேண்டும். இணைப்புக் கடிதத்தைத் தனித்தாளில் எழுத வேண்டும்.

பரிசுபெறும் கதைகள் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்டவை தென்றலில் வெளியிடப்படலாம். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் கதைகளின் பட்டியல் அறிவிக்கப்படும்.

தேர்வு குறித்து 'தென்றல்' ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானதாகும். இது குறித்து எந்தவிதக் கடித/மின்னஞ்சல் போக்குவரத்தும் வைத்துக்கொள்ள இயலாது.

தேர்ந்தெடுக்கப்படும் கதைகளைத் தென்றல் இதழிலும் www.tamilonline.com வலையகத்திலும் வெளியிடும் உரிமை 'தென்றல்' இதழுக்கு உண்டு. பின்னர் சிறுகதைத் தொகுப்பு நூலாகவும் வெளியிடப்படலாம். படைப்புகளின் உரிமை படைப்பாளிகளிடமே இருக்கும்.

படைப்புகள் எம்மிடம் வந்துசேரக் கடைசி நாள்: 31 மார்ச் 2014.

ஜூன் 2014 தென்றல் இதழில் முடிவுகள் அறிவிக்கப்படும்.

மின்னஞ்சலில் அனுப்ப: thendral@tamilonline.com (with subject: Shortstory Contest-2014)

தபாலில் அனுப்ப: Thendral, PO Box: 60787, Sunnyvale, CA 94088, USA.

தென்றல்


© TamilOnline.com