பரமப்ரேமா
நவம்பர் 28, 2013 அன்று பாலோ அல்டோவின் ஸ்பாங்கன்பர்க் அரங்கில் ஸ்ரீராம லலிதகலா மந்திரின் நிறுவனர் திருமதி. ஜெயஸ்ரீ வரதராஜனின் 120 மாணவர்கள் ஒன்றிணைந்து ஓர் இசை நிகழ்ச்சியை நடத்தினர். பல சமூகப் பணிகளைச் செய்துவரும் நந்தலாலா மிஷனுக்கு நிதி திரட்டும் முகமாக 'பரமப்ரேமா' என்னும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இறைவன்மீது தூய்மையான பக்தி கொண்ட பல்வேறு மொழி வாக்கேயக்காரர்களின் பாடல்களை மாணவர்கள் மிக அழகாகப் பாடினர். இப்பாடல்கள் குலசேகராழ்வார் இயற்றிய 'முகுந்த மாலை'யின் வரிகளை அடிப்படையாகக் கொண்டவை.

சுவாமி தயானந்த சரஸ்வதியின் 'மஹா கணபதிம்' என்ற திலங் ராகப் பாடலுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து நாராயண தீர்த்தர், ராமதாஸர், சதாசிவ பிரம்மேந்திரர், அன்னமாசாரியார், அம்புஜம் கிருஷ்ணா, பாபநாசம் சிவன், மீராபாய் ஆகியோர் பாடல்களைப் பாடினர். புரந்தரதாஸரின் ஆபேரி ராகத்தில் அமைந்த 'அம்பிகா', தியாகராஜரின் ஸ்ரீராகப் பஞ்சரத்ன கீர்த்தனை, ஹம்சாநந்தியில் தில்லானா என்று மாணவர்கள் சேர்ந்து பாடியது அருமை. இறுதியாக அனைத்து மாணவர்களும் தீபங்களைக் கையிலேந்தி ஸ்ரீநாராயணனுக்கு சமர்ப்பணம் செய்தது பிரமிக்க வைத்தது. நிகழ்ச்சியை திருமதி. ஜெயஸ்ரீ வரதராஜன் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

டி. ஸ்ரீதர் மற்றும் சம்யுக்தா நாராயண் ஒவ்வொரு பாடலுக்கும் தெளிவான விளக்கவுரை வழங்கினர். நாராயணன் ராஜு, பிரஹலாத வரதன், திருமலை மற்றும் ராஜன் வரதராஜன் ஆகியோர் முகுந்தமாலையின் வரிகளை ஒவ்வொரு பாடலுக்கு முன்னும் பாராயணம் செய்தனர். ரங்கஸ்ரீ வரதராஜன் (வயலின்), பிரசன்னா ராஜன் (புல்லாங்குழல்), ரவீந்திர பாரதி ஸ்ரீதரன் (மிருதங்கம்), சந்திரமௌளி விரிஞ்சிபுரம் (மோர்சிங்), ஆதித்யா சீனிவாசன் (கடம்) ஆகியோர் வாசித்த பக்கம் நிகழ்ச்சிக்கு மெருகூட்டியது. நம்ரதா ஆனந்தின் தாளம் ஒருங்கிணைந்துப் பாட வைத்தது. இந்நிகழ்ச்சிக்காக நந்தலாலா மிஷன் (USA) மற்றும் நந்தலாலா சேவா சமிதி (இந்தியா) நிறுவனர் பூஜ்யஸ்ரீ மதியொளி சரஸ்வதி அம்மா அவர்கள் இந்தியாவிலிருந்து வந்து கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சங்கரி செந்தில்குமார்,
பசடீனா, கலிஃபோர்னியா

© TamilOnline.com