வாஷிங்டன்: நான்காம் தமிழிசைப் போட்டி
டிசம்பர் 14, 2013 அன்று வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், குழந்தைகளுக்கான நான்காம் தமிழ் இசைப்போட்டி மற்றும் இசை நிகழ்ச்சியை முருகன் கோவில் கலையரங்கத்தில் நடத்தியது. தமிழே இனிமை, மழலைத் தமிழ் அதனினும் இனிமை. பாடல் சுகமானது, குழந்தை பாடும் தமிழ்ப் பாட்டு அதனினும் சுகமானது என அரங்கில் வந்து பாடிய குழந்தைகள் நிரூபித்தனர்.

முனைவர். ஜெயந்தி சங்கர், திருமதி. புஷ்பராணி வில்லியம்ஸ், திரு. சுந்தர் குப்புசாமி ஆகியோர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தினர். திரு. கொழந்தவேல் இராமசாமி, திருமதி. கல்பனா மெய்யப்பன், திரு. நாஞ்சில் பீட்டர், திரு. விஜய் முத்துசாமி, திரு. பார்த்தசாரதி சம்பந்தம் ஆகியோர் நிகழ்ச்சி நன்கு நடைபெற உதவினர். திருமதி. லதா கண்ணன், திரு. பாபு விநாயகம் நடுவர்களாக இருந்தனர். தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. ஜான் பெனடிக்ட் தமிழில் பாடிப் பின் உரையாற்றினார். திருமதி. உமா சுரேஷ் மற்றும் திருமதி நிர்மலா சிங்காரவேலு தமிழ் இசைப் போட்டியில் பங்கேற்ற குழந்தைகளின் பெயர்களைப் பதிவு செய்ய உதவினர்.

எட்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு பிரிவாகவும், அதற்கு மேற்பட்ட குழத்தைகள் மற்றொரு பிரிவாகவும் போட்டியிட்டன. தமிழை அதிகம் பயன்படுத்த வாய்ப்பில்லாத அமெரிக்காவில் பிறந்த குழந்தைச் செல்வங்கள் தமிழில் பாடுவதைக் காணப் பெருமையாக இருந்தது. போட்டிக்குப் பின் திருமதிகள் தீபா மற்றும் திவ்யா சகோதரிகளின் கர்நாடக இசையிலைமைந்த தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்க் கீர்த்தனைகள், பாடல்கள், காவடிச் சிந்து போன்றவை பாடப்பட்டன. திரு. விஜய் கணேஷ் மிருதங்கம் வாசித்தார். திருமதி. பாவனி மல்லஜோச்யுல வயலின் வாசித்தார். திருமதி. லதா கண்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.

போட்டியில் முதல் மூன்று இடங்களை வென்ற குழந்தைகளுக்கு முனைவர். ஜெயந்தி சங்கர், திருமதி. கல்பனா மெய்யப்பன், திரு. ஆண்டி கிரி ஆகியோர் பரிசளித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.

வள்ளிமயில் பாபு,
மேரிலாண்ட், வாஷிங்டன்

© TamilOnline.com