வடகரோலினா: தமிழ்மழை
டிசம்பர் 22, 2013 அன்று கேரி தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஆண்டு விழாக் கொண்டாடினர். ஆரம்ப வகுப்பு மழலைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, நிகழ்ச்சி தொடங்கியது. பிறகுவந்த மாணவர்கள், பாரதியாரின் "அச்சமில்லை அச்சமில்லை", "மனதில் உறுதி வேண்டும்" ஆகிய பாடல்களைத் நெஞ்சைத் தட்டி வீரத்துடன் பாடி மகிழ்வித்தார்கள். அடுத்து "ஒன்றென்று சொல்லுவோம் ஒன்றாய்க் கூடி வாழ்ந்திடுவோம்", எண்கள் பாட்டு, "அம்மா இங்கே வா வா" போன்ற பாடல்களை மழலையில் பாடி மகிழ்வித்தனர்.

தமிழ் விடுதலை போராட்ட வீரர்கள், வீராங்கனைகளைப் பற்றி அடுத்துவந்த மாணவர்கள் பேசினார்கள். குறிப்பாக மகாகவி பாரதியார், வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டப்பொம்மன், ஈழ மன்னன் பண்டாரவன்னியன் ஆகியோரைப் பற்றிய தகவல்களைத் தொகுத்து வழங்கினர். 'குறளும் பொருளும்' என்ற தலைப்பில் திருக்குறள்களைப் பொருளோடு எடுத்துரைத்தனர். பின்னர், ஐந்து சிறுகதைகளை மாணவர்கள் கூறினார்கள். அவர்களுள் ஒருவர் கதை கூறுபவராகவும் ஏனையோர் கதையில் வரும் பாத்திரங்களையும் ஏற்றுப் பேசியது, கேட்க நன்றாக இருந்தது. தொடர்ந்து "ஒற்றுமையே பலம்", "விவேகம் வெல்லும்" ஆகிய நாடகங்களை வழங்கினர்.

உயர்நிலை வகுப்பு மாணவர்கள் "தமிழை வளர்க்கத் தேவையானது ஆசிரியர்களும் புத்தகங்களுமா அல்லது தன்னம்பிக்கையும் விடாமுயற்சியுமா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தினார்கள். அவர்கள் தமிழ் வளர்க்கத் தேவையானவற்றை அலசி ஆராய்ந்தார்கள். தொடர்ந்து நடந்த நேர்காணல் நிகழ்ச்சியில் வாழ்வில் வெற்றியடைந்த ஒருவரை நேர்காணுவதாக அமைத்திருந்தனர். உதாரணத்திற்கு கனேடிய பாராளுமன்றத்தின் முதல் தமிழ் உறுப்பினரான ராதிகா சிற்சபையீசன், மதுரை மாவட்ட ஆட்சியாளர் உ. சகாயம், காவல்துறை அதிகாரி கிரண் பேடி ஆகியோரைப் பேட்டி எடுத்தது சுவையாக இருந்தது.

பின்னர் குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் "சின்னஞ்சிறு வயசிலே", "வேண்டும் முயற்சி", "நம்பிக்கை காக்கா" ஆகிய பாடல்களைப் பாடினார்கள். அடுத்து, ஓர் அணி சில தலைவர்களைப்பற்றி விவரம் கூற, அத்தலைவர் யார் மற்றோர் அணி கூறுவதாக அமைந்த 'நான் யார்?' நிகழ்ச்சி கலகலப்பாக இருந்தது. அதன்பின், மாணவர்கள் சில சிறுகதைகளை நடித்துக் காட்டினர். இறுதியாக, மாணவர்கள் வில்லுப்பாட்டு மூலம் "ஆட்டுக்குட்டியின் சாதுரியம்" என்ற கதையைக் கூறினர்.

மாணவர்கள் இப்பொழுது இலகுவாகத் தமிழைப் பேசுகிறார்கள், இயற்கையாக வாதிடுகிறார்கள். தென்கரோலினாவில் இருந்து வந்திருந்த நண்பர் ஒருவர் தமிழ் மழை நிகழ்வுகள் அதிர்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்ததாகக் கூறினார். இவ்வளவு விடயங்களை மாணவர்கள் எவ்வாறு மனப்பாடம் செய்தார்கள், அவர்களின் ஆசிரியர்கள் எவ்வளவு முயற்சிகளை எடுத்திருப்பார்கள் என்று வியந்தார். எல்லோர் எண்ணமும் அதுவே.

கலாநிதி. நாகலிங்கம் சிவயோகன்

© TamilOnline.com