கன்கார்டு: தைப்பூசப் பாதயாத்திரை
நான்காம் ஆண்டாக இவ்வருடமும் கன்கார்டு சிவமுருகன் ஆலயத்திற்குப் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் சான் ரமோன் மத்தியப் பூங்கா வாகன நிறுத்துமிடத்தில் கூட ஆரம்பித்தனர். சுமார் 7.30 மணிக்கு 350 பேருக்குமேல் கூடிவிட, சிறு குழுக்களாகப் பாதயாத்திரை துவங்கியது. சென்ற ஆண்டுகளைவிட அதிகம் பேர் பதிவு செய்துகொண்ட நிலையில், பிரம்மாண்டமான ஏற்பாடுகள், தன்னார்வ தொண்டர்கள் என்று யாத்திரை நடத்திடத் திட்டங்கள் முன்னதாகவே தயாராயின. சான் ஹோசே, மில்பிடாஸ், ஃப்ரீமான்ட் பகுதிகளிலிருந்து முந்தைய நாள் (ஜனவரி 17) காலை புறப்பட்டு அன்றிரவே சான் ரமோன் வந்து தங்கினர். இங்கிருந்து கிளம்பியவர்களின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 500. இவ்வாண்டு முதன்முறையாக நான்கு உள்ளூர் வெள்ளை இனத்தவர்கள் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கத்து.

சுமார் ஒன்றரை மணி நேர நடைக்குப் பின்னர், டேன்வில் ரயில் ரோடு சந்திப்பில் சுடச்சுடக் காலை உணவு உண்டு, சிறிது ஓய்வெடுத்து பக்தர்கள் மேலே நடந்தனர். கிட்டத்தட்ட 3 மணி நேரமும் எட்டு மைலும் கடந்து, வால்டன் பூங்காவைச் சென்றடைந்தனர். புல் தரையில் அமர்ந்த பக்தகோடிகள் வயிறார உணவுண்டனர். சுமார் 12 மணி அளவில், யாத்திரை தொடர்ந்தது.

வால்டன் பூங்காவிலிருந்து கிட்டத்தட்ட 1000 பேர் இறுதிப்பகுதி பயணத்தைத் துவங்கினர். விறுவிறுவென நடந்து கியரி பொலிவார்டு கடந்தவுடன் சிற்றுண்டிக்குப் பஞ்சமில்லை. அசதி தெரிந்தாலும் கருத்தில் கொள்ளாமல், கந்தனைக் காண எட்டி நடைபோட்டு, சுமார் 3 மணிக்கு கன்கார்டு கோவில் சென்றடைந்தனர். கந்தனை தரிசித்து, பிரசாதம் உட்கொண்டதும் மகிழ்ச்சிப் பெருக்கோடு திரும்பும் நேரம் ஆயிற்று. மறுநாள் காலை காவடி பாற்குடங்கள் கோயிலை வலம்வந்து செலுத்தப்படுகின்றன. மதியம் முருகன் திருக்கல்யாணம். இப்படி இரண்டு நாட்களும் கன்கார்டு சிவமுருகன் கோவிலில் திருவிழாக் கோலம்தான்.

இத்தனை பேருக்கும் குறைவில்லாமல் ஏற்பாடுகளைச் செய்த சோலை மற்றும் நண்பர் குழுவிற்குப் பாராட்டுகள். கோவில் விஸ்தரிப்புக்கான நிதி சேர்ப்பு நடவடிக்கைகள் நல்ல முறையில் நடந்து வருகின்றன. இந்த மகத்தான பணிக்கு உதவி செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் அணுக வேண்டிய மின்னஞ்சல் - odysee786@gmail.com

கணேஷ் பாபு,
சான் ரமோன், கலிஃபோர்னியா

© TamilOnline.com