பாரதி தமிழ் சங்கம்: பொங்கல் விழா.
ஜனவரி 18, 2014 அன்று பாரதி தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் 145 குழந்தைகளும் 20க்கு மேற்பட்ட பெரியவர்களும் பங்கேற்ற 45 நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திரு. வேணு ரங்கநாதன் வரவேற்றுப் பேசினார். விரிகுடாப்பகுதியின் கர்நாடக இசை கலைஞர்களான திரு. அசோக் சுப்பிரமணியம், திரு. ஹரி தேவநாத், திருமதி. கீதா சேஷாத்ரி, திருமதி. கல்பகம் கௌஷிக், திருமதி. சுலேகா ஆகியோரின் மாணவர்கள் பாடினர். திருமதி. தீபா மகாதேவன், திரு. விஜயசாரதி, குரு. ஸ்ரீலதா சுரேஷ், திருமதி. சுகந்தா ஐயர், திருமதி. அஜீதா ஆகியோரின் மாணவிகள் பரத நாட்டியம் வழங்கினர். திரு. கோபியின் மாணவர்கள் மிருதங்கம் வாசித்தனர். திருமதி. ஜெயந்தி சுப்ரமணியத்தின் கோலாட்டமும், திருமதி. ஜனனி குமார் மாணவர்களின் கிராமிய நடனமும் சிறப்பாக இருந்தன.

திருமதிகள் விஜி ஆனந்த், சுவாதி, குஹா, உமா முத்து, இந்துமதி, கோமதி ரமேஷ் ஆகியோர் திரைப்படப் பாடல்களுக்கு நடனம் அமைத்திருந்தனர். சஷாங்க் குமார், கீர்த்தி குமார், அபிநயா செந்தில், அதிதி விஜயகுமார், இரணியன் திரையிசைப் பாடல்கள் பாடினர். நான்கு வயது வைஷ்ணவி "பூக்கும் ஓசை" முழுப் பாடலையும் கரியோக்கியில் பாடி பார்வையாளர்களை அசத்தினார். சிறு குழந்தைகள் சுலோகங்களும், பாரதி பாடல்களும் பாடினர். ரியா ஐயர், சுரஜ் மாரிமுத்து ஆகியோரின் பியானோ இசையுடன் குழந்தைகள் நிகழ்ச்சிகள் முடிவடைந்தது. அஜீதா - ரயன் இருவரின் சிறப்பான நடனமும், ரூபன், குமார், சுவாதி ஆகியோரின் திரையிசைப் பாடல்களும் ஆட்டம் குழுவினரின் நடனமும் இடம்பெற்றன. மதுரை பல்கலைக்கழகப் பேராசிரியர் பாரதி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொங்கல் குறித்துப் பேசினார். நிகழ்ச்சிகளை திருமதிகள் உஷா அரவிந்தன், காவேரி கணேஷ், உமா முத்து, பிரேமா ஆகியோர் தொகுத்து வழங்கினர். திருமதி.கௌரி சேஷாத்ரி நன்றி உரைக்க நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.

நித்யவதி சுந்தரேஷ்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com