வாஷிங்டன்: பொங்கல் விழா
ஜனவரி 18, 2014 அன்று வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கம் நார்த்வெஸ்டர்ன் மேனிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடியது. தமிழ்த் தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது. திருமதி. கல்பனா மெய்யப்பன் வரவேற்புரை அளித்தார். திரு. பாபு விநாயகம், திருமதி மல்லிகா ஜம்புலிங்கம் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

முதலாவதாக, குழத்தைகளுக்கான திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில், சரியாகச் சொல்லும் ஒவ்வொரு குறளுக்கும் ஒரு வெள்ளி பரிசாக அறிவிக்கப்பட்டது. 4 முதல் 12 வரை வயதுடைய குழந்தைகள் 52 பேர் பங்கேற்றனர். ஏழு வயதே நிரம்பிய அனன்யா ராமசுவாமி 33 வெள்ளிகள் பெற்று அசத்திச் சென்றாள்.

தொடர்ந்து, தமிழ்சங்கப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. 2013ம் ஆண்டிற்கான செயலர் அறிக்கையைத் திருமதி. கல்பனா மெய்யப்பன் அளித்தார். பொருளாளர் அறிக்கையை முனைவர். ஜெயந்தி சங்கர் வழங்கினார். திரு. ஜான் பெனெடிக்ட் தலைவர் உரை ஆற்றினார். 2014ம் ஆண்டு செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் அறிக்கையை தேர்தல் அலுவலர் திரு. சிவசைலம் அறிவித்தார். தலைவராகத் தேர்வுபெற்ற திருமதி. கல்பனா மெய்யப்பன் பதவியேற்பு உரையாற்றினார். பின்னர் வள்ளுவன் தமிழ்ப் பள்ளிக் குழந்தைகளின் கிராமிய நடனம் நடைபெற்றது. திருமதி. சௌமியா பிரகாஷ் நடன வடிவமைத்திருந்தார். பூர்ணா, விதுஷி, அவிக்ஷித், அக்ஷரா, ஆர்ஷியா, ஜெயதித்யா, மித்ரா மற்றும் ஜெனிலா இதில் நடனமாடினர். திருமதி. ரோசி மற்றும் திருமதி அனிதா ஜோகன் வடிவமைத்த 'விண்மீன் கூட்டமே' குழந்தைகள் நடன நிகழ்ச்சியில் ரஷ்மி, ஜெமிமா, ஜெனிடா, ரேச்சல், ரெனி, வெரோனிகா, ஷலோமி, ஷேரன் ஆகியோர் பங்குபெற்றனர். அதைத் தொடர்ந்து மேரிலாந்து தமிழ் பள்ளியின், திருக்குறள் நடனநாடகம் நடைபெற்றது. பெண்களுக்கான வண்ணக் கோலப் போட்டியில் வெற்றி பெற்றோருக்குத் திரு.சுரேஷ் ராமமூர்த்தி பரிசு வழங்கினார்.

திருமதி. அனு கோபாலகிருஷ்ணன் வடிவமைத்த குழு நடனத்தில் குழந்தைகள் ஸ்மிதா, ஸ்நேஹா, ஷ்ரேயா, ம்ரிதிகா மற்றும் ரிதிகா பங்கேற்றனர். திரு. சுபாகர் சபாபதி மற்றும் திரு. பாலகன் ஆறுமுகசுவாமி சங்கத்தின் இதழை வெளியிட்டனர்.

அடுத்ததாக "குழந்தைகளுக்கு நல்ல பெயர் சூட்டுவது எப்படி?" என்ற தலைப்பில் கருத்துப் பரிமாறல் குழந்தை. இலக்கியாவின் சுவையான பாடலில் தொடங்கி இனிதே நடைபெற்றது. அதன்பின், "ஆள்மாறாட்டக் கதாகாலஷேபம்" என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் திரு. வல்லபை ஐசக் மற்றும் திரு. மனோகரன் பங்கேற்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்த "நறுமுகையே" திரைப்படப் பாடலுக்கான நடனத்தைத் திருமதி. வளர்மதி இளங்கோவன் வடிவமைத்திருந்தார். இதில் குழந்தைகள் ஜனனி, வருணா, நித்யா, ஐஸ்வர்யா, ஷலோமி, ஷாரன் மற்றும் ரம்யா பங்கேற்றனர். அதன்பின், திரு. நாஞ்சில் பீட்டர் அவர்கள் 2014ம் ஆண்டிற்கான வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் (FETNA) பேரவை விழாகுறித்த விவரங்களை அறிவித்தார்.

அதன் பின் வந்த குழு நடனத்தில் திருமதியர் ஆர்த்தி கார்த்திக், தீபா சந்திரன், வடிவு ராஜ்குமார், தீபா ரவி ஆகியோர் நடனமாடினார். அதைத் தொடர்ந்து திருமதி. சுப்பு ரவி வடிவமைத்த "வந்தனமாம் வந்தனம்" என்ற ஆண்கள் துள்ளல் நடனத்தில் திருவாளர்கள். ரவி, ஜோசப், கார்த்தி, பார்த்தா, சங்கத் தலைவர் ஜான் பெனெடிக்ட் ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நினைவுநாள் மெல்லிசைப் பாடல்களைத் திருவாளர்கள் பாலாஜி ஸ்ரீநிவாசன், செல்வம், பாபு விநாயகம், திருமதி. ஹரிணி மற்றும் செல்வி. பூஜா ஆகியோர் பாடி மகிழ்வித்தனர். மற்றுமொரு மறக்க முடியாத பொங்கல் விழாவாக இது இருந்ததென்றால் அதில் ஐயமில்லை.

வள்ளிமயில் பாபு,
ஹயாட்ஸ்வில், மேரிலாந்து

© TamilOnline.com