37வது புத்தகக் காட்சி
சென்னையின் புகழ்பெற்ற புத்தகக் காட்சி ஜனவரி 10 முதல் 22 வரை YMCA மைதானத்தில் நடந்தேறியது. 37வது வருடமாக நடக்கும் இக்கண்காட்சியில் எழுநூறு அரங்குகளும், ஐந்து லட்சம் தலைப்புகளில் நூல்களும் இடம்பெற்றிருந்தன. கிட்டத்தட்ட பத்து லட்சம் பார்வையாளர்கள் கோடிக்கணக்கில் நூல்களை அள்ளிச் சென்றனர். குழந்தைகளுக்கான அறிவுப்புதிர் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் அரங்குகள் மற்றும் ஆன்மீக குருமார்களின் அரங்குகள் அதிகம் இருந்தன.

ஜெயமோகனின் 'வெள்ளை யானை' புத்தகக்காட்சிக்கு முன்னரே வெளியாகியிருந்தாலும் அங்கும் நல்ல வரவேற்பு. எஸ். ராமகிருஷ்ணனின் 'நிமித்தம்', 'இலக்கற்ற பயணி' (உயிர்மை), கவிஞர் சுகுமாரனின் 'வெல்லிங்டன்' (காலச்சுவடு), தியடோர் பாஸ்கரனின் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே' (காலச்சுவடு), யுவன் சந்திரசேகரின் 'நினைவுதிர்காலம்' (காலச்சுவடு), மதுமிதாவின் 'பருவம்' (சந்தியா), கவிஞர் மகுடேஸ்வரனின் 'பாட்டுத்திறம்' (புலம்), எஸ். செந்தில்குமாரின் 'கால கண்டம்' (உயிர்மை) போன்றவை இந்த ஆண்டின் சூடான விற்பனைகள். இளம் எழுத்தாளர்களான விநாயகமுருகனின் 'ராஜீவ்காந்திசாலை', கவிஞர் வா. மணிகண்டனின் 'லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்', கு. சிவராமின் 'கர்ணனின் கவசம்' போன்ற நூல்களும் பறந்து கொண்டிருந்தன.

கடந்த ஆண்டுகளைப் போலவே மொழிபெயர்ப்பு நூல்கள் நிறைய வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. கேரள சாகித்ய அகாதமி விருதுபெற்ற 'ஹிமாலயம்', தமிழில் வம்சி பதிப்பகத்தாலும், அற்புதம் அம்மாளின் சுயவரலாறு யூமா வாசுகியாலும் மொழிபெயர்க்கப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றன. 'ஒநாய் குலச்சின்னம்' (ஜியாங் ரோங்), 'பனி' (ஒரான் பாமுக்), 'நள்ளிரவின் குழந்தைகள்' (சல்மான் ருஷ்டி), 'முதல் மனிதன்' (ஆல்பர்ட் காம்யூ) போன்ற மொழிபெயர்ப்பு நூல்களுக்கும் நல்ல வரவேற்பு. கண்காட்சிக்கு வெளியே இருந்த அரங்கில் தினமும் சிறப்புச் சொற்பொழிவு, கருத்தரங்கம் முதலியன நடைபெற்றன. கண்காட்சிக்குள்ளே அமைந்த ஜீவா சிற்றரங்கில் புத்தகங்கள், குறும்பட வெளியீடு, வாசகர்-எழுத்தாளர் சந்திப்பு எனப் பல நிகழ்வுகள். புத்தகங்களின் விலை மிக அதிகம் என்ற வாசகர்களின் முணுமுணுப்பையும் பரவலாகக் கேட்க முடிந்தது. மொத்தத்தில் இவ்வாண்டு புத்தக விற்பனை சில பதிப்பத்தாருக்கு மட்டுமே மகிழ்வைத் தந்தது என்கிறார்கள்.

தகவல்: அரவிந்த்

© TamilOnline.com