சங்கர நேத்ராலயா: 'கான திருஷ்டி'
பிப்ரவரி 8, 2014 அன்று 'கானதிருஷ்டி' என்ற இசைநிகழ்ச்சி சாரடோகா உயர்நிலைப் பள்ளியிலுள்ள மெகாஃபி கலையரங்கில் நடைபெற இருக்கிறது. இதில் திரட்டப்படும் நிதி கண்பார்வையற்ற ஏழை, எளியோருக்குச் சிகிச்சை வழங்கும் சென்னை சங்கர நேத்ராலயாவுக்கு அளிக்கப்படும்.

இந்த நிகழ்ச்சியில் ராகமாலிகா இசைப்பள்ளி இயக்குநரும் பாடகியுமான திருமதி. ஆஷா ரமேஷ் மற்றும் ராஜ்குரு சங்கீத வித்யா நிகேதன் இசைப்பள்ளி'யின் இயக்குநரும் இந்துஸ்தானி இசைக்கலைஞருமான திரு. நசிகேதா யாகுண்ட்டி ஆகியோர் பங்கேற்பர். இவ்விரு இசைகளின் 'ஜூகல்பந்தி'யாக இந்த விருந்து அமையும்.

சென்னையின் புகழ்பெற்ற கண் மருத்துவமனைகளுள் ஒன்று சங்கர நேத்ராலயா. இம்மருத்துவமனையில் தினமும் சுமார் நூறு அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன, 1200 பேர் சிகிச்சை பெறுகிறார்கள். 'ஆலயம்' என்ற பெயருக்கேற்ப இதுவோர் ஆலயமாகவே திகழ்கிறது. ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் தரமான சிகிச்சை அளிக்கும் நோக்கத்தில் 1978ம் ஆண்டில் துவங்கப்பட்டது இம்மருத்துவமனை.
ஆஷா ரமேஷ், திரு. டி.கே. ஜயராமனின் சிஷ்யை. இவருக்குச் சென்னை கிருஷ்ண கான சபா 2009ம் 'விஜயலக்ஷ்மி நினைவுப் பரிசும், 'டிரினிடி கல்சுரல் சென்டர் 2013ம் ஆண்டுக்கான இசையரசி விருதும் வழங்கி கௌரவித்தன. டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் இசைவிழாக்களில் கச்சேரிகள் வழங்கி வருகிறார். விரிகுடாப் பகுதியிலும் இவரது கலைத்தொண்டு தீவிரமாகத் தொடர்ந்து வருகிறது.
நசிகேதா யாகுண்ட்டி கர்நாடகத்தின் தார்வாட் பகுதியைச் சேர்ந்தவர். சென்னை திரு. பி.என். ஸிம்ஹா, திரு. பி. ஹனுமாச்சார் ஆகியோரிடம் சங்கீதம் பயின்றவர். பின்னர் பத்மபூஷன் பண்டிட் பஸவராஜ் ராஜ்குருவிடம் இசை பயின்றிருக்கிறார். தற்போது விரிகுடாப் பகுதியில் 'ராஜ்குரு சங்கீத வித்யா நிகேதன் இசைப்பள்ளி'யை நிறுவி ஹிந்துஸ்தானி இசை பயில்விக்கிறார். 'கீதாஞ்சலி' இசை நிறுவனத்தின் முதுநிலை கலையாசிரியரும்கூட.

அருணா கிருஷ்ணன்,
சாரடோகா, கலிஃபோர்னியா

© TamilOnline.com