குரு தந்த வெள்ளிக் கிண்ணம்
1893ம் ஆண்டு. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் இருந்த சமயம். அவர் சர்வசமய மாநாட்டுக்குச் செல்வதற்காகத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே டிக்கின்ஸன் என்ற 17 வயது இளைஞர் தன் தாயாருடன் வந்து கொண்டிருந்தார். சுவாமி விவேகானந்தரைப் பார்த்தவுடன் அந்த இளைஞருக்குச் சொல்லொணாப் பரவசநிலை ஏற்பட்டது. அவர், ஐந்து வயதாக இருக்கும்போது ஏரி ஒன்றில் மூழ்கித் தத்தளித்தபோது அவருக்குக் காட்சி அளித்துக் காப்பாற்றிய உருவம் இதுவே என்பதை உணர்ந்து கொண்டார். தன் தாயாரிடம் அதுபற்றித் தெரிவித்தார். பின் சுவாமிகளைப் பின்தொடர்ந்து சென்று, அவர்தான் சுவாமி விவேகானந்தர் என்பதையும், அவர் இந்தியாவிலிருந்து உரையாற்ற வந்திருக்கிறார் என்பதையும் அறிந்து கொண்டார்.

மாநாட்டின் முடிவில் சுவாமி விவேகானந்தரைச் சந்தித்தார் டிக்கின்ஸன். சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் பூத்த முகத்துடன் டிக்கின்ஸனிடம், "நீ எப்பொழுதும் தண்ணீரை விட்டுச் சற்று விலகியே இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்" என்று கூறினார். தான் சிறுவனாக இருந்தபோது நடந்த, தனக்கு மட்டுமே தெரிந்ததாக நினைத்த அதிசயச் சம்பவத்தை விவேகானந்தர் கூறக் கேட்டதும் 'தன்னைக் காப்பாற்றியவர் இவரே' என்பது டிக்கின்ஸனுக்கு உறுதியாயிற்று. தனக்கு குருவாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

உடனே சுவாமி விவேகானந்தர், "என் அன்பு மகனே! நான் உன் குரு அல்ல; உன் குரு பின்னால் வருவார். உனக்கு வெள்ளிக் கிண்ணம் ஒன்றையும் பரிசாகத் தருவார். இப்பொழுது உன்னால் தாங்கிக்கொள்ள முடிந்ததைவிட மிக அதிகமான அருளாசிகளை உன்மேல் பொழிவார்" என்று கூறி ஆசிர்வதித்தார்.

அதன் பிறகு சுவாமி விவேகானந்தரை டிக்கின்ஸன் சந்திக்கவே இல்லை.

இது நடந்து கிட்டத்தட்ட 32 ஆண்டுகள் கழிந்தபின், 1925ம் ஆண்டில், இந்தியாவின் மற்றொரு மாபெரும் யோகியான பரமஹம்ச யோகானந்தர் டிக்கின்ஸனுக்கு வெள்ளிக் கிண்ணம் ஒன்றைப் பரிசாக அளித்ததுடன், தமது சீடராகவும் ஏற்றுக் கொண்டார். சுவாமி விவேகானந்தர் ஒரு தீர்க்கதரிசி.

© TamilOnline.com