தமிழ்நாடன்
கவிஞரும் எழுத்தாளருமான தமிழ்நாடன் (இயற்பெயர்: சுப்பிரமணியன்) காலமானார். 72 வயதான தமிழ்நாடன் சேலத்தில் பிறந்தவர். கல்லூரிப் படிப்பை முடித்து ஆசிரியராகப் பணிபுரியத் துவங்கியவர், சி.சு.செல்லப்பா, ஆதித்தனார் உள்ளிட்ட பலரால் ஈர்க்கப்பட்டார். கவிதையின்மீது ஆர்வம் கொண்டு பல கவிதைகளை எழுதினார். 'வானம்பாடி' கவிஞர்களுள் ஒருவராக இடம் பெற்றார். தனித்தமிழின் மீது பற்றுக்கொண்ட இவர் பல நூல்களையும் கட்டுரைகளையும் படைத்தார். ஒரிய மொழிக் கவிதை நூல் மொழிபெயர்ப்பிற்காக இவருக்கு சாகித்ய அகாதமி விருது கிடைத்தது. தமிழ் செம்மல் விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, நல்லாசிரியர் விருது, பாரதிதாசன் விருது, சிற்பி அறக்கட்டளை விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். பணி ஓய்விற்குப் பின் பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றினார். ஓவியத்தின் மீதும் ஆர்வம் கொண்டவர்.

பாரதிதாசனின் "குமரகுருபரர்" நாடகத்தைக் கண்டறிந்து முதன்முதலில் அச்சேற்றியவர் தமிழ்நாடன்தான். தொன்மங்களின் மீது ஆர்வம் கொண்டிருந்த இவர் நண்பர்களுடன் இணைந்து அகழாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார். அது குறித்து நூல்களும் எழுதியிருக்கிறார். கொங்குநாடு பற்றி இவர் ஆராய்ந்து எழுதிய நூல்கள் குறிப்பிடத்தக்கன. சிறந்த மொழிபெயர்ப்பாளர் மற்றும் பதிப்பாசிரியரும் கூட. பரிதியார் உரையோடு கூடிய திருக்குறள் சுவடியைக் கண்டறிந்து முதன்முதலில் பதிப்பித்திருக்கிறார். இவர் எழுதிய '2000 Years of Salem', 'கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி', 'கலையும் இலக்கியமும்' போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கன.



© TamilOnline.com