அரங்கேற்றம்: ராஜி வெங்கட்
ஆகஸ்ட் 10, 2013 அன்று செல்வி. ராஜி வெங்கட்டின் பரதநாட்டிய அரங்கேற்றம் அட்லாண்டாவில் நடைபெற்றது. குரு திருமதி. உமா புலேந்திரன் நிகழ்ச்சியை அழகாக வடிவமைத்திருந்தார். நடனம் பூமாஞ்சலியில் ஆரம்பித்து அலாரிப்பு, ராகமாலிகா ஜதிஸ்வரம் எனத் தொடர்ந்து இடைவேளைக்கு முன் 'சாமீ நீ' என்ற ஸ்ரீரஞ்சனி ராக, பாபநாசம் சிவன் வர்ணத்தில் முடிந்தது.

இடைவேளைக்கு பிறகு நிகழ்ச்சியின் வேகம் கூடியது. லதாங்கி ராகத்தில் அமைந்த ஆடும் பாதனை சிதம்பர நடராஜரை நம் கண்முன் நிறுத்தியது. தொடர்ந்து சுருட்டி ராகத்தில் அமைந்த இந்தெந்து ஜாவளிக்கு ராஜியின் முகபாவம் மிகப் பொருத்தமாக அமைந்தது. கோபம் கொண்ட தலைவி தலைவனை 'வீடு இடமாறி வந்துவிட்டீர்களோ' என்று கேட்கிறாள். பாலமுரளிகிருஷ்ணாவின் கதனகுதுகுல ராகத் தில்லானா, அபாரமான உற்சாகத்துடன் அமைந்திருந்தது. மங்களத்திற்குப் பதிலாக சிதார் ரவிசங்கர் அவர்களின் நினைவாக உமா புலேந்திரன் வடிவமைத்த அவரது பாடல் பிரசாந்திக்கு ராஜி மிகவும் நேர்த்தியாக பக்திரசத்துடன் ஆடினார்.

சாரண்யா பிள்ளையின் இனிமையான குரல்வளம், கோகுல் குமாரின் வயலின், ஜி.எஸ் ராஜனின் புல்லாங்குழல், ரோஹன் கிருஷ்ணமூர்த்தியின் மிருதங்கம், உமா புலேந்திரனின் நட்டுவாங்கம் ஆகியவை பிரமாதம். நாட்டிய முன்னோடி குரு சந்திரசேகர் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்தது சிறப்பு அம்சம்.

சித்ரா வெங்கட்,
அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com