சிகாகோ தங்க முருகன் விழா
டிசம்பர் 14, 2013 லெமாண்ட் (இல்லினாய்) பகுதியில் இருக்கும் சிகாகோ இந்துக் கோவிலில் நாள்முழுதும் 'தங்க முருகன் விழா' கொண்டாடப்பட உள்ளது. சிறுவர் முதல் முதியோர்வரை கலந்துகொள்ளும் உற்சாகத் திருவிழா இது.

காலை எட்டு மணிக்குத் திருப்பள்ளியெழுச்சி, நன்னீராட்டு ஆகியவற்றுக்குப் பின் திருப்புகழ், கந்தசஷ்டி கவசம் பாடி, முருகனை தங்க நிறப் பல்லக்கில் அமர்த்தி தாள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வருவர். குழந்தைகள் பூ தூவி வரவேற்க அரங்கத்தில் இருத்தி, முக்கிய விருந்தினர் குத்துவிளக்கேற்ற நிகழ்ச்சி ஆரம்பிக்கும். சிறப்புரைகள், முருகன் வேடம் தரித்த குழந்தைகளின் காட்சி, பஜன், ஆடல், பாடல், நாடகம், வினா-விடைப் போட்டி, வாத்திய இசை, சொற்பொழிவு, காவடி என நிகழ்ச்சிகள் நடைபெறும்.

300க்கும் மேற்பட்ட குழந்தைகளின் பங்கேற்பை ஊக்குவிக்கும் விதத்தில் இந்துக்கோவில் சார்பில் சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருள் தந்து கௌரவிக்கும். இந்த நிகழ்ச்சியைப் பல ஆண்டுகளாக நடத்திவருபவர் விழாக்குழுத் தலைவர் திரு கோபாலகிருஷ்ணன் ராமசாமி அவர்கள்.

உமாபதி பட்டர்

© TamilOnline.com