நவம்பர் 2013: வாசகர் கடிதம்
தென்றலில் விளம்பரம் செய்தேன். நிறையப் பேர் தொடர்பு கொண்டனர். என் சகோதரியின் திருமணம் நிச்சயமாகிவிட்டது. தென்றலுக்கு நன்றி.

அன்புடன்
ரூபா, விஸ்கான்சின்

*****


நடிகர் ராஜேஷ் நேர்காணல் படித்தேன். அவர் நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதரும்கூட. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை உள்ளகரத்தில் எல்.கே.ஜி. படித்த என் பெண்ணுக்கு முதல் பரிசு அவர் கையால் கிடைத்தது. அவள் மிக நன்றாகப் படித்து இப்போது அமெரிக்காவில் இருக்கிறாள்.

ஸ்ரீநிவாசன்,
சென்னை 600 061, தமிழ் நாடு

*****


அக்டோபர் இதழில் 'தென்றல் பேசுகிறது' பகுதியில் லூசியானா மாகாணத்தில் ஓரிடத்தில் பூமி பிளந்து நிலத்தை விழுங்கும் செய்தியைப் படித்தவுடன் ஒரு தகவலைப் பகிர்ந்துகொள்ளத் தோன்றியது. என் மகன் முதுநிலைப் பட்டத்துக்காக லூசியானா ஸ்டேட் யூனிவர்சிடியில் முதலாம் வருடம் படிக்கும்போது, கோடைக்காலத்தில் கல்லூரியின் நிலவியல் மையத்தில் பணியமர்ந்தார். ஒவ்வோராண்டும் லூசியானா மாகாணத்தின் கடற்கரை ஓரம் 25லிருந்து 35 சதுர மைல்வரை தண்ணீருக்குள் அமிழ்ந்து விடுகிறது. அதற்குக் காரணம் என்ன, அதைத் தடுக்க வழியென்ன என்பவற்றை அறிய ஆராய்ச்சி நடைபெறுகின்றது. அதற்காக என் மகன் கடற்கரையோரம் சென்று அங்குள்ள மரங்களை எண்ணுவதும், அவற்றைச் சுற்றி பிளாஸ்டிக் வலை போடுவதும், அங்கு நிலத்தின் உயரம், கடலின் உயரம் எனப் பலவற்றை சர்வே செய்து, வரைபடத்தில் குறித்து ஆய்வு மையத்தில் தாக்கல் செய்வார். காலை 4 மணிக்கே விசைப்படகு இணைத்த காரில் பயணத்தைத் தொடங்குவார்கள். ஒன்று, ஒன்றரை மணி நேரம் பயணம் செய்து கடற்கரையின் தாழ்வான பகுதியில் விசைப்படகை கடலில் விட்டுப் பயணிப்பார். படகில் ஓரிரு மணி நேரப் பயணம். குறிப்பிட்ட இடம் வந்ததும் சர்வே தொடங்கும்.

தகவல்களை வரைபடத்தில் குறித்தபடி வேலை செய்யும்போது இரவு வந்துவிடும். வேலை முடியாவிட்டால் கரையில் உள்நோக்கிச் சென்று மரக்குடில்களில் தங்கி மறுநாள் வேலை முடிப்பார்கள். தீவு போன்ற அந்த இடங்களில் மனிதர்கள் வசிப்பதில்லை. அவை மிகவும் சுவாரஸ்யமும் சிறிது பயமும் நிறைந்த பயணங்களாகும் என்று என் மகன் நினைவுகூர்ந்தார். இறைவன் படைத்த இயற்கையில்தான் எத்தனை அற்புதங்கள்!
வீணை பாலச்சந்தர் அவர்களின் வாரிசான பரத்வாஜ் ராமன் பாலசந்தர் வீணை வாசிப்பில் உபயோகித்த அத்தனை நுணுக்கங்களையும் கற்றுச் சிறப்பாக வளர வாழ்த்துகின்றேன். அமெரிக்காவில் தமிழ் சிறப்பாக வருங்கால சந்ததியாருடன் கைகோர்த்துச் செழிக்கிறது என்பதற்கான அத்தாட்சிதான்

'வாஷிங்டன் புறநானுறு மாநாடு'. காண்டேகர், காஸ்ரீஸ்ரீ, சாமி. சிதம்பரனார் பற்றிய விவரங்கள் நன்றாக இருந்தன.

அரசியல் கலக்காத, நாளுக்கு நாள் விரிவாக மலரும் தென்றலில் வந்த அத்தனையும் சிறப்பாக இருந்தது. செப்டம்பர் இதழில் மதுரை ஆர். முரளீதரன் பேட்டியைப் படித்து அவரைப் பற்றி அறிந்துகொண்டேன். சினிமா போன்ற மீடியாவே 'கல்கி' அவர்களின் சரித்திரக் காவியங்களை அணுகத் தயங்கும் போது, துணிச்சலாக 'சிவகாமியின் சபதம்' நாவலைநாட்டிய நாடகமாக்கியுள்ளார். பிரமிப்பாக உள்ளது.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிடி, கலிஃபோர்னியா

© TamilOnline.com