கி.வா.ஜவின் சிலேடைகள்
காலையில் வந்த மாலை
ஒரு ஊருக்குச் சொற்பொழிவாற்ற இரவு ரயிலில் புறப்பட்டு மறுநாள் காலை சென்று இறங்கினார் கி.வா.ஜ. அங்குள்ளவர்கள் அவரை மாலை மரியாதையோடு வரவேற்றார்கள். உடனே கி.வா.ஜ, "ஆஹா. காலையிலேயே மாலை வந்துவிட்டதே" என்றார்.

*****


பூரியும் ஜகன்னாதரும்
ஓரூரில் கி.வா.ஜ.வின் சொற்பொழிவு முடிந்ததும் பரிமாற அவருக்குச் சிற்றுண்டி தயாரித்து வைத்திருந்தார் ஒரு பெண்மணி. கி.வா.ஜ. உணவுக்காக இலைமுன் அமர்ந்தார். அப்பெண்மணி பூரியைப் பரிமாறிக் கொண்டே, "உங்களுக்கு பூரி பிடிக்குமொ இல்லையோ? உங்களுக்கென்றே மிகுந்த அக்கறையோடு இந்த பூரியைத் தயாரித்திருக்கிறேன்" என்றார்.

உடனே கி.வா.ஜ. "என்னம்மா இது ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்றார். இந்தப் பதிலைக் கேட்ட அந்தப் பெண்மணி பூரித்துப் போனாள்.

*****


கனியிருப்பக் காய் கவர்தல்!
விழா ஒன்றுக்காக டில்லி சென்றிருந்தார் கி.வா.ஜ. உடன் நண்பர்களும் இருந்தனர். நண்பர் ஒருவர் வீட்டிற்கு அனைவரும் சென்றனர். அங்கே தேங்காய்த் துண்டுகளும், மிளகாய் வற்றலையும் வெயிலில் காய வைத்திருந்தனர். நண்பர்களில் ஒருவர் அந்தத் தேங்காய்த் துண்டுகளில் சிலவற்றை வாயில் எடுத்துப் போட்டுக்கொண்டார்.

உடனே கி.வா.ஜ, "சரிதான். பழம் இருக்க காயைத் தின்கிறீர்களே! கனியிருப்பக் காய் கவர்ந்தற்று என்று வள்ளுவர் சொன்னது சரியாய்த்தான் போயிற்று" என்றார்.

*****


நடுத்தெருவிலிருந்து புது வீட்டுக்கு
கி.வா.ஜ.வின் நண்பர் ஒருவர் மயிலாப்பூரின் நடுத்தெருவில் வசித்து வந்தார். பின்னர் அவர் ஒரு சொந்த வீடு கட்டிக்கொண்டு போனார். சில நாட்கள் கழித்து அவர் கி.வா.ஜவைப் பார்க்க வந்தபோது புதிய வீட்டுக்குக் குடிபோன செய்தியைத் தெரிவித்தார்.

உடனே கி.வா.ஜ., "நல்லவேளை! இவ்வளவு நாள் நடுத்தெருவில் இருந்தீர்கள். இப்போது வீடு கட்டிக்கொண்டீர்கள். சபாஷ்!" என்றார்.

*****


சிறுபையன்
காஞ்சி மகாப் பெரியவரைத் தரிசிக்க நண்பர்களுடன் காரில் செல்லத் திட்டமிட்டார் கி.வா.ஜ. காரை வைத்திருந்த நண்பர், "ஏற்கனவே நிறையப் பேர் வருகிறார்கள். நீங்கள் அதிக சாமான்களைக் கொண்டு வராதீர்கள்" என்றார்.

மறுநாள் கார் வந்தது. கையில் ஒரு சிறு பை மட்டும் வைத்திருந்தார் கி.வா.ஜ. காரில் ஏறும்முன், "நான் ஒரு சிறு பையன். எனக்கு இடம் இருக்கும் தானே!" என்றார்.

கி.வா.ஜவின் சிலேடைகள் நூலிலிருந்து, அல்லயன்ஸ் வெளியீடு.

© TamilOnline.com