அரங்கேற்றம்: ஷிவானி அனந்த்
ஆகஸ்ட் 3, 2013 அன்று லம்பியர் ஹைஸ்கூலில் செல்வி. ஷிவானி அனந்தின் பரதநாட்டியம் அரங்கேறியது. 'நூபுர் அகாடமி ஆஃப் டான்ஸ்' நாட்டியப் பள்ளியின் குரு திருமதி. ராதிகா ஆசார்யாவிடம் பத்து வருடங்களாக பரதம் பயின்றவர் ஷிவானி. நிகழ்ச்சியை விநாயகர் துதியுடன் கூடிய தோடய மங்கலத்திற்கு அபிநயம் பிடித்துத் துவக்கினார். நடராஜரைக் கவுத்துவத்தில் பதம்பிடித்து வணங்கிப் பிறகு அலாரிப்பு மற்றும் ஜதிஸ்வரத்தில் நளினமாகத் தமது திறமையை வெளிக்கொணர்ந்தார். சப்தத்திற்கு 'சரஸிஜாக்‌ஷலு' என்ற பாடலுக்கு அபிநயம் பிடித்த பின்னர் புரந்தரதாசர் கீர்த்தி மற்றும் 'எத்தனை சொன்னாலும்' பாடல் ஆகியவற்றிற்குப் பதங்கள் மூலம் வடிவமைத்தார்.

தில்லானா மற்றும் திரிகூட ராசப்பக் கவிராயரின் குறவஞ்சியில் தமது கலையின் பன்மையை அரங்கேற்றி மங்களத்துடன் முடித்துக் கொண்டார் ஷிவானி. நட்டுவாங்கத்தில் திருமதி. ராதிகா ஆசாரியா, வாய்ப்பாட்டில் திரு. வினோத் கிருஷ்ணன், மிருதங்கத்தில் திரு. சேம் ஜெயசிங்கம், வயலினில் திரு. ஜெயசங்கர் பாலன் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர். ராதிகா ஆசாரியா பல வருடங்களாக மிச்சிகனில் பரதம் பயில்வித்து வருகிறார். இவர் இந்தியா, ஐரோப்பா, அமெரிக்கா உட்படப் பல இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்.

மிச்சிகனின் இண்டர்நேஷனல் அகாடமியில் பள்ளிப்படிப்பு முடித்த ஷிவானி இவ்வாண்டு கல்லூரியில் வணிகம் படிக்கவுள்ளார். தந்தையார் திரு. அனந்த் தமிழ்க் கவிஞர். தமிழ்நாடு ஃபவுண்டேஷன், மிச்சிகன் தமிழ்ச் சங்கம் போன்றவற்றில் தன்னார்வப் பணி செய்கிறார்.

காந்தி சுந்தர்,
டெட்ராய்ட், மிச்சிகன்

© TamilOnline.com