எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம்
ஜூன் 9, 2013 அன்று பாரதி தமிழ்ச் சங்கம் நிதி திரட்டும் பொருட்டாக 'எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோஷம் (YESS 2013)' என்ற நிகழ்ச்சியை நடத்தியது. தமிழ் நாட்டின் தொலைக்காட்சி இசைப் போட்டிகளில் வெற்றி பெற்று, திரையுலகப் பின்னணிப் பாடகர்களாக வளர்ந்திருக்கும் அனுஷ் கணேஷ், காயத்ரி அருண், பிரகதி குருப்ரசாத், சூப்பர் சிங்கர் ரவி கோபிநாத், ஸ்ரீநாத், விமலா ரோஷினி ஆகியோருடன் வளைகுடாப் பகுதி இசைக் கலைஞர்களும் இணைந்து இதனை அளித்தனர்.

சங்கத் தலைவர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா வரவேற்புரை வழங்கினார். ஸ்ரீநாத் பாடிய விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி துவங்கியது. விடேஸ் இசைக்குழு மறைந்த இசை மேதைகள் டி.எம். சௌந்திரராஜன், டி.கே. ராமமூர்த்தி, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில் ஓர் அஞ்சலி இசையை வழங்கியது. பொருளாளர் நித்யவதி சுந்தரேஷ் சங்கத்தின் சார்பில் அஞ்சலி உரை ஆற்றினார். கே.வி.மகாதேவன் துவங்கி ஏ.ஆர். ரஹ்மான் வரையிலான இசையிலமைந்த ஏராளமான பாடல்கள் ரசிகர்களை மகிழ்வித்தன. திருப்பதி பீமாஸ் திரு. சுரேஷ் கலைஞர்களைக் கவுரவித்தார். இடைவேளையில் மலையாளிக் கலைஞர்கள் செண்டை மேளத்தை வாசித்தபடி வந்து மேடையேறினார்கள். திரு. டி.டி. பாலாஜி தொகுத்து வழங்கினார்.



© TamilOnline.com