வெள்ள நிவாரணமும், உயிர் பலியும்!
வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்ணெண்ணெய், ஒரு வேட்டி, ஒரு சேலை ஆகியவை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அது மட்டு மல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் எல்லா ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பாகுபாடின்றி அரசின் வெள்ள நிவாரணத் தொகுப்பு உதவி கிடைக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

இதன் விளைவாகத் தமிழகம் எங்கும் மக்கள் ரேஷன் கடைகளில் குவியத் தொடங்கிவிட்டனர். நிவாரணம் கிடைக் காதவர்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட நிகழ்வுகளும் அன்றாடம் ஆங்காங்கே நடைபெறத் தொடங்கின. இதற்கிடையில் சென்ற மாதம் வடசென்னை வியாசர்பாடி அம்பேத்கர் கலைக் கல்லூரியில் மக்கள் கூட்டநெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு வீண் வதந்திகள் முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ள நிவாரணம் கேட்டு சுமார் 4000-க்கும் மேற்பட்ட மக்கள் அதிகாலை மூன்று மணியளவிலேயே திரளாக டோக்கன் வாங்குவதற்காக அறிஞர் அண்ணா மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கனமழையின் காரணமாக மக்கள் முண்டி யடித்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்குள் நுழைய முற்பட்டபோது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தப் போதிய அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தால் இத்தகைய விபத்தை தடுத்திருக்கலாம் என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

செய்தி கேட்டு உடனடியாக மருத்துவ மனைக்கு விரைந்த முதல்வர் ஜெயலலிதா விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரூபாயும் வழங்கியதோடு குடுமபத்தினருக்கு ஆறுதலும் சொன்னார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஜெயலலிதா இச்சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆ.ராமன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்றார்.

இதற்கிடையில் தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் சென்னையில் கூடி, 42 பேர் இறந்ததற்குப் பொறுப்பேற்று ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து உடனடியாகப் பதவி விலகவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது முக்கியமானது.

இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக தி.மு.க கவுன்சிலர் க.தனசேகரன் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com