13,685 கோடி ரூபாய் நிதியுதவி கேட்கும் தமிழகம்
தொடர்ந்து வறட்சி, சுனாமி போன்ற வற்றால் முந்தைய ஆண்டுகளில் பாதிக்கப்பட்டு இருந்த தமிழகம், முன் எப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் தொடர்ந்து நான்கு முறை வெள்ளத்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு முன்பணமாக மூன்றாயிரம் கோடி ரூபாய் நிதி உதவியை மத்திய அரசிடம் முதல்வர் ஜெயலலிதா கேட்ட தோடு, பாதிப்புகளைப் பார்வையிட மத்தியக் குழுவினரை அனுப்புமாறும் கேட்டார். இந்நிலையில் மீண்டும் தமிழகத்தை மழை தாக்கியது. டி.எஸ். மிஸ்ரா தலைமையில் 10 பேர் அடங்கிய மத்திய குழு மறுபடியும் வந்து வெள்ளச்சேதத்தைப் பார்வையிட்டது. அவர்களைச் சந்தித்த முதல்வர் தமிழகத்துக்கு 13,655 கோடி ரூபாய், 258 லட்சம் டன் அரிசி, 42,200 கிலோ லிட்டர் மண்ணெண்ணெய் ஆகியவற்றைக் கூடுதலாக ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டார். ஆனால் மத்திய அரசு 500 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்தது. இது போதாது என்று முதல்வர் ஜெயலலிதா அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெறும் கடிதத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்க முடியாது என்றும் மறுவாழ்வுப் பணிகள் தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை அனுப்புமாறும் தமிழக அரசை மத்திய அரசு கேட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் பிரதமர் மன்மோகன்சிங்கை தில்லியில் சந்தித்து வெள்ளநிவாரண உதவிகளை உடடினடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்தச் சந்திப்புக்குப் பிறகு மத்திய அரசு மேலும் 500 கோடி ரூபாய் ஒதுக்கியது குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com