சத்குரு வெற்றிப்படி
வெற்றிப்படி 1: கைகளை நம்புவோம்! கைரேகையை அல்ல
சில சமயங்களில் எதேச்சையாக, அதிர்ஷ்டவசமாக, சில விஷயங்கள் உங்களுக்குச் சாதகமாக நிகழ்ந்துவிடலாம். அப்படிக் காற்று உங்கள் பக்கம் வீசும் சமயத்திற்காக நீங்கள் காத்திருந்தால், நல்ல விஷயங்கள் உங்கள் கல்லறையில்தான் நடக்கும். ஏனென்றால் அச்சமயம் வராமல் கூடப் போய்விடும் சாத்தியம் உண்டு. உங்களுக்கு தெரியுமா, நீங்கள் கோடான கோடி தடவை ஒரு திடமான சுவரின் ஊடே நடந்து அதைக் கடந்து செல்ல முயன்றால், அதில் ஒரு முறை நீங்கள் கடந்துவிட முடியுமென்று குவான்டம் கோட்பாடு (Quantum Theory) கூடச் சொல்கிறது. ஆனால், அதில் ஒரு சிறிய சிக்கல்... அந்தக் கோடான கோடி தடவையைத் தொடும்முன் உங்கள் மண்டையோடு உடைந்துபோகும் சாத்தியமும் கூடவே இணைந்திருக்கும், அப்படிதானே? இதுதான் அதிர்ஷ்டத்தை நம்பிக் கணக்கு போடுபவர்களின் நிலையும்கூட.

அதிர்ஷ்டத்தை நம்பி வாழும்போது, பயத்திலும் பதற்றத்திலும் வாழ்கிறீர்கள். நீங்கள் தெளிவான நோக்கத்துடனும் திறமையுடனும் வாழும்போது உங்களுக்கு எது நடந்தாலும் நடக்காவிட்டாலும், உங்களுக்கு நடப்பவைமேல் உங்களுக்கு ஆளுமை இருக்கும். அதுதான் ஸ்திரமான வாழ்க்கை.

வெற்றிப்படி 2: தோல்வியில் தொலைவதை நிறுத்துங்கள்
உறுதியோடு இருக்கும் ஒரு மனிதனுக்குத் தோல்வி என்பதே கிடையாது. ஒரு நாளுக்கு 100 முறை நீங்கள் கீழே விழுந்தால், அவை நீங்கள் கற்கும் 100 பாடங்களாகிவிடும். நீங்கள் விரும்புவதை உருவாக்குவதில் உறுதியுடன் இருந்தால், உங்கள் மனம் ஒரே திசையில் நிலைத்துவிடும். உங்கள் மனம் இருக்கும் திசையில் உங்கள் உணர்ச்சிகளும் ஒன்றிவிடும். ஏனென்றால் நீங்கள் சிந்திக்கும் விதத்தில்தான் நீங்கள் வாழ்க்கையை உணரும் விதமும் இருக்கும். உங்கள் எண்ணமும் உணர்வுகளும் ஒன்று சேர்ந்தால், உங்கள் சக்திகளும் உங்கள் உடலும்கூட அத்திசையில் ஒருங்கிணைந்துவிடும். இவை அனைத்தும் ஒருமுகமாகின்ற போது, நீங்கள் விரும்புவதை உருவாக்கி உங்கள் கனவை நிஜமாக்கும் திறமை அபாரமாகிவிடும். பலவிதங்களில் நீங்கள் படைப்பாளராகி விடுவீர்கள்.

வெற்றிப்படி 3: தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல
ஒரு மனிதனுக்குத் தேவை தெளிவு, குருட்டு நம்பிக்கை அல்ல. ஒரு கூட்டத்தின் நடுவே நீங்கள் நடக்கும்போது, உங்கள் பார்வை தெளிவாக இருந்தால், ஒவ்வொருவரும் எங்கு இருக்கிறார் என்று உங்களால் பார்க்க முடிந்தால், கூட்டத்தில் ஒருவரைக்கூடத் தொடாமல் நீங்கள் மிகச் சுலபமாக நடந்து சென்றுவிடுவீர்கள். உங்கள் பார்வை தெளிவாக இல்லை, ஆனால் நீங்கள் அதீத நம்பிக்கை உடையவர் என்கிறபோது, அத்தனை மீதும் ஏறி தட்டுத் தடுமாறித்தான் செல்வீர்கள். உங்களுக்குத் தெளிவில்லாத காரணத்தால், தன்னம்பிக்கை நல்ல மாற்றுப்பொருள் என்று எண்ணம் கொள்கிறீர்கள். தெளிவிற்கு தன்னம்பிக்கை ஒருபோதும் மாற்றாகாது.

ஒரு நாணயத்தைச் சுண்டிவிடுங்கள். "சரி, தலை விழுந்தால் முதல் திட்டப்படி செயல்படுவோம். பூ விழுந்தால் இரண்டாம் திட்டப்படி செயல்படுவோம்" என்று முடிவெடுத்துச் செயல்பட்டால், உங்கள் திட்டம் வேலை செய்வதற்கு 50 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது, இல்லையா? இதுபோல் முடிவெடுப்பவராய் நீங்கள் இருந்தால், உலகில் நீங்கள் இரண்டு தொழில்களைத்தான் செய்ய முடியும். ஒன்று நீங்கள் வானிலை அறிக்கையாளராக அல்லது ஜோசியக்காரராக இருக்கலாம். இந்த பூமியில் நீங்கள் வேறெந்த வேலையும் செய்ய முடியாது.

வெற்றிப்படி 4: கொஞ்சம் வளைந்து கொடுங்கள்
வாழ்க்கையில் பலவிதமான சூழ்நிலைகளைக் கையாள்வதற்கு, நமக்கு வெவ்வேறு விதமான ஆளுமைக் குணங்கள் தேவை. அதில் நீங்கள் நீரோடைபோல் வளைந்துகொடுக்கும் தன்மையுடன் இருந்தால், நீங்கள் எடுத்திருக்கும் பாத்திரத்தில் உங்களால் முழுத் திறனுடன் செயல்பட முடியும். அதில் சிறிதும் சிக்கலிருக்காது. ஆனால் பலர் சூழ்நிலைக்கேற்றவாறு வளைந்து கொடுக்க முடியாமல் கட்டுண்டு கிடக்கிறார்கள். அவர்களுக்குப் பிடிக்காதவற்றையும் புரியாதவற்றையும் எதிர்கொள்ளும்போது, அவர்கள் சொல்ல முடியாத பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

நீங்கள் அதை உடைக்க வேண்டுமென்றால், நீங்கள் அதை முற்றிலும் வேறுவிதமாக அணுக வேண்டும். நீங்கள் செய்யக்கூடிய மிக எளிமையான செயல் இது: உங்களுக்குப் பிடிக்காத ஒருவருடன் சேருங்கள். அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுங்கள், மிக அன்பாக, ஆனந்தமாக! உங்களுக்குப் பிடிக்காதவற்றைச் செய்யுங்கள், உங்களுக்குப் பிடிக்காதவர்களுடன் இருங்கள். அந்தச் சூழ்நிலையிலும் நீங்கள் புத்தியுடன், அன்புடன், ஆனந்தத்துடன் வாழக் கற்றுக் கொண்டால் அதுவே உங்களுக்கு வெற்றி.

வெற்றிப்படி 5: எனக்கு என்ன கிடைக்கும்?
உயர்ந்த மனிதன் ஆகவேண்டும் என்கிற பேராவல் உங்களுக்கு இருக்கத் தேவையில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்பதன்மேல் உள்ள கவனத்தைத் தாண்டி உங்கள் குறிக்கோளையும், நீங்கள் இயங்கும் வளையத்தையும் விரிவுபடுத்திவிட்டால், எப்படியும் நீங்கள் உயர்ந்த மனிதராகத்தான் இருப்பீர்கள். உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்று சில மனிதர்கள் ஏங்கியதில்லை. அவர்கள் பார்வை "எனக்கு என்ன கிடைக்கும்?" என்பதைத் தாண்டி இருந்தது. "எனக்கு என்ன கிடைக்கும்?" என்ற இந்த ஒரு கணக்கை மட்டும் நீங்கள் கைவிட்டுவிட்டு, உங்கள் திறமையின் உச்சத்தில் செயல்பட்டால், ஏதோ ஒருவிதத்தில் நீங்கள் உயர்ந்தவராகத்தான் இருப்பீர்கள்.

அப்போது இயல்பாகவே "என்னைச் சுற்றியிருக்கும் உயிர்களுக்கு நான் என்ன செய்ய முடியும்?" என்று பார்க்கத் துவங்கிவிடுவீர்கள். உங்கள் திறமைகளையும் இயல்பாகவே அதிகரித்துக் கொள்வீர்கள், ஏனென்றால் செய்வதற்கு அவ்வளவு செயல்கள் இருக்கும்!

சத்குரு ஸ்ரீ ஜக்கி வாசுதேவ்

© TamilOnline.com