எதிர்பார்ப்பு...
பிரச்சினை என்று எதுவும் இல்லை. ஆனால் மனதை நெருடும் சின்ன, சின்ன விஷயங்கள். ஒருமுறை நானே எனக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிறேன். இன்னொரு முறை மனது துவண்டு போகிறது. இன்னொரு முறை வெறுப்பும், கோபமும் ஏற்படுகிறது. இரண்டு வருடமாக அவ்வப்போது இந்த மனஉளைச்சல் ஏற்பட்டு, இப்போது எனக்கும், என் கணவருக்குமே அடிக்கடி வாக்குவாதம் இருந்து கொண்டு வருகிறது.

அவர் மிகவும் நல்லவர். சாது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வாழ்க்கையில் முன்னேறி இங்கே நாங்கள் வந்து செட்டிலாகி 15 வருஷம் ஆகிவிட்டது. அவர் எந்த ஆடம்பரத்தையும் விரும்ப மாட்டார். சாதாரண வீடு, சாதாரண கார். குழந்தைகளையும் அப்படியே வளர்த்தோம். சேர்த்து வைக்கும் பணத்தில் இந்தியாவில் உள்ள வசதியில்லாத உறவினர்களின் பசங்களை படிக்க வைத்து, அவர்களுக்கு இங்கே வர உதவி செய்து, அந்தக் குடும்பங்களை முன்னேற வைத்திருக்கிறார். எனக்கு நல்ல அழகான வீடு, Yearly vacation என்றெல்லாம் முடியவில்லையே என்று வருத்தம். இருந்தாலும் என் பக்க உறவு, அவர் பக்க உறவு என்று பேதம் பார்க்காமல் எல்லோருக்கும் உதவி செய்ய விரும்பும் அந்த குணத்தை புரிந்து கொண்டு நானும் அவருக்கு முழு ஆதரவைக் கொடுத்தேன்.

இப்போது ஐந்து பேர் தங்கள் படிப்பை முடித்துவிட்டு இங்கே நல்ல வேலையில் ஆங்காங்கே அமர்ந்து விட்டார்கள். (ஒருவன் திரும்பி போய்விட்டான் என்று நினைக்கிறேன்) இதில் வருத்தமான விஷயம் என்னவென்றால் அவரவர்கள் எங்களுடன் வந்து இருந்து எல்லா உதவிகளையும் பெற்றுக் கொண்டு, ஒரு emotional attachment இல்லாமல் பறந்து போய்விடுகிறார்கள். அவர்களுக்குள் நல்ல தொடர்பு இருக்கிறது. அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறார்கள் என்று கேள்விபட்டதும் எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. நாங்கள் எந்த விழாவிற்கு கூப்பிட்டாலும், ஏதோ சாக்கு சொல்லி வருவதில்லை. எதனால் இப்படி என்று எனக்கு புரியாமல் ஒருமுறை ஒரு பையனைக் கூப்பிட்டுக் கேட்டுவிட்டேன். வரக்கூடாது என்றில்லை ஆன்ட்டி.. வேலையில் மிகவும் பிசியாகிவிடுகிறோம். party என்றால் அதெல்லாம் youngsters party உங்களுக்கு பிடிக்காது என்று ஏதோ சொல்லி பேச்சை முடித்துவிட்டான். எங்கள் உதவியை ஏதோ ஒரு Non profit Foundation ஆக நினைத்து ஒவ்வொருவராக வந்து அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு எங்களை மறந்து விடுகிறார்களோ என்று யோசிக்க ஆரம்பித்தேன். என் கணவருக்கு உள்ளுக்குள் வருத்தம் இருந்தாலும் அதைக் காட்டிக் கொள்வதில்லை. நான் அவ்வப்போது அவர்கள் செய்ததை குத்திக் காட்டி எனது மனவருத்தத்தை சொன்னாலும் அவர் பதில் சொல்வதில்லை.

சமீபத்தில் ஒரு பையன் அவன் நண்பனுக்கு உதவி வேண்டுமென்று இவருக்கு போன் செய்தான். இவரும் நார்மலாக பேசி வேண்டியதை செய்வதாக வாக்களித்தார். என்னிடம் அடுத்த மாதம் யாரோ ஒருவன் இன்டர்வியூக்கு வருவதாகவும், நான் போய் பிக்ஆப் பண்ணிக் கொண்டு வர வேண்டும் என்றார். மேலும் நம் வீட்டில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் தங்குவானென்றும் சொன்னார். எனக்கு மிகவும் எரிச்சல் வந்தது. நான் அவரிடம் சண்டை போட்டேன். 'மனிதர்கள் ஏறி மிதித்து தங்களுக்கு வேண்டியதை செய்துக் கொள்கிறார்கள். இந்த மனிதருக்கு ஏன் ரோஷம் வரவில்லை?'' 'கடமையை செய், பலனை எதிர்பார்க்க கூடாது'' என்று கீதையை மேற்கோள் காட்டினார். நான் வெறுத்துவிட்டேன். எதிர்பார்ப்புக்கள் கூடாது என்று பகவான் கிருஷ்ண பரமாத்மாவிலிருந்து பக்கத்து வீட்டு கிறிஸ்டினா வரை அழகாக ஆலோசனை சொல்லிவிடுகிறார்கள். நான் என்ன பணத்தையா எதிர்பார்த்தேன். ஒரு recognition எந்த வகையிலாவது ஆத்மார்த்தமான ஒரு சின்ன நன்றி - இது கூட தப்பா? மிகவும் வெறுப்பாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.

இப்படிக்கு...

அன்புள்ள சிநேகிதியே...

இந்தக் கடிதத்தின் முதல் பகுதியில் உங்கள் மனநிலையை அழகாக எடுத்து சொல்லி யிருக்கிறீர்கள். அது எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. நீங்கள் மட்டுமல்ல எல்லோருமே உங்களைப் போல் தான் ஒரு emotional roller coaster இருப்பார்கள். உங்கள் கணவர் ஒரு அபூர்வ பிறவி. அவருக்கு, பிறருக்கு உதவி செய்வதில் ஒரு ஆர்வம். Magnificent Obsession.

எதிர்பார்க்கக்கூடாது என்ற சித்தாந்தத்தை நான் பின்பற்றுவதில்லை. நம் ஒவ்வொரு செயலிலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த எதிர் பார்ப்புதான் வாழ்க்கையில் ஒரு நம்பிக்கையை கொடுக்கிறது. அந்த நம்பிக்கை ஒரு மனோபலத்தைக் கொடுக்கிறது. அந்தப் பலம் நாம் முன்னேறக்கூடிய ஓர் ஆக்கச்சக்தியை கொடுக்கிறது. அந்த சக்தி நமக்கு ஒரு உந்துதலையும் self esteemயும் உண்டு பண்ணுகிறது.

எதிர்பார்ப்பு என்றவுடன் நம் மனம் நல்லதையே விழையும். அத்துடன் ஒரு பாதுகாப்பு உணர்வும் சேர்ந்து இருந்தால், ஏமாற்றம் போன்றவைகளை Damage control செய்ய முடியும். உதாரணம். ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல காரை எடுக்கிறோம். வாடகைக் கார் என்று வைத்துக் கொள்வோம். Brake, Oil, Gas, Light என்று எல்லாமே முதலில் செக் பண்ணிக் கொள்கிறோம். நமக்கு கார் ஓட்டும் திறமையில் நம்பிக்கை இருந்தாலும் Insurance AAA, Cell phone என்று ஒரு விபத்து என்று ஏற்பட்டால் அதை நேர்கொள்ள தயார் செய்து கொள்கிறோம்.

அதே போல உங்கள் விஷயத்தில்...

* படிக்க வந்திருக்கும் பையன்களுக்கு நீங்கள் செய்யும் தியாகத்தை முழுதாக அறிந்திருக்கும் வாய்ப்பில்லை. அமெரிக்காவில் இருக்கிறார்கள். வசதி படைத்தவர்கள். மிகவும் நல்ல மனது. உதவி செய்கிறார்கள். அவ்வளவுதான். நீங்கள் எழுதியது போல University aid /grant கிடைத்தது போல நினைத்துக் கொள்வார்கள்.

* ஒரே வயது. ஒரே மாதிரி வாழ்க்கை நிலை. கொஞ்சம் பொருளாதார வசதி என்றால் அவர்கள் தங்களுக்குள் 'Party'. 'Meeting'. 'fun' என்று இருப்பார்கள். அந்த உலகம் அவர்களுடையது. அங்கே வயதில் முதிர்ந்த கேளிக்கை, ஆடம்பரம் விரும்பாத குடும்பங்களுக்கு இடம் இல்லை. இது ஒரு காரணமாக இருக்கலாம்.

* உங்கள் கணவர் உங்களைப் போல வெளிப்படையாக தன்னுடைய வருத்தத்தை தெரிவிக்கவில்லை என்றாலும், உள் மனதில் அவருக்கு பட்டுக்கொண்டுதான் இருக்கும். அவர் நான் கூறியது போல் தானே ஒரு analysis செய்து தன் மனதை பக்குவப்படுத்திக் கொண்டிருப்பார். ஆனால் உதவி செய்வதை நிறுத்த மாட்டார். அது அவருடைய இயல்பு.

* இவ்வளவு வருடம் உங்கள் கணவருக்கு முழு ஒத்துழைப்பை கொடுத்து பல குடும்பங்களை கரையேற்றி இருக்கிறீர்கள். நீங்களும் ஒரு அருமையான மனிதபிறவி. இந்த வாழ்க்கைக்கு நீங்களும் பழகி விட்டீர்கள். மனம் முதலில் முரண்டாலும், பிறகு தானாக தன் நிலைக்கு வந்துவிடும். நீங்கள் இன்னும் philosophical ஆக மாறி உங்கள் கடமையை தொடரத்தான் போகிறீர்கள்.

* உண்மையிலேயே, மனித சேவையில் ஈடுபட்டவர்களுக்குத்தான் மனவலி மிகவும் இருக்கும். சமூக அம்புகளும், கல்லடிகளும் அவர்கள் மேல்தான் அதிகம். காரணம் they are not selfish. They are special people. வீட்டு ஜன்னல்களையும், கதவுகளையும் மூடி வைத்து பொருளாதார ரீதியில் தங்களுக்குள்ளேயே வாழ்க்கையை அனுபவிக்காமல், சுயநலமில்லாமல் வெளியிலே தைரியமாக வந்து இந்த சேவைப் போரில் ஈடுபடுகிறார்கள்

* You are special people நீங்கள் உதவி செய்த இளைஞர் சமூகம், இன்று உங்கள் சேவையை இனம் கண்டு கொள்ளா விட்டாலும், ஒருநாள் அவர்கள் தன் நிலைக்கு வந்து உங்களைப் பற்றி நிறைய யோசிப்பார்கள். பிறரிடம் புகழ்வார்கள். அது உங்களுக்கு தெரியக்கூட வராது.

''கையேந்துவதை விட கைகொடுப்பது எத்தனை பெருமை. உயர்வு!'' மனது கொஞ்சம் சரியாகிவிட்டதா?

சித்ரா வைதீஸ்வரன்

© TamilOnline.com