அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள்: ஆறாவது ஆண்டு விழா
மே 11, 2013 அன்று வில்லா பார்க் புனித அலெக்சாண்டர் பள்ளியின் உள்ளரங்கில் (சிகாகோ புறநகரம்), மில்வாக்கி (விஸ்கான்சின்), மன்ஸ்டர், (இந்தியானா), பியோரியா (இல்லினாய்) தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த ஆறாவது ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் தொடக்கமாகத் தமிழ்ப்பள்ளிகளின் மாணாக்கர் திருக்குறள், தமிழ்த்தாய் வாழ்த்துக்களை இசைத்தனர். பள்ளிகளின் ஒருங்கிணைப்பாளர் வ.ச. பாபு முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவும் கூர்ந்த பின், உயிரீந்த தமிழர்க்கு நன்றி கூறுமுகமாக 2 நிமிட அமைதி கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர் அவர் வரவேற்புரை வழங்கினார். ஆறாவது ஆண்டு நாளில் சிகாகோ மாநகரத்தைச் சுற்றி செயல்படும் கெர்ணி, டெஸ்பிளெய்ன்ஸ், டேரியன், சாம்பர்க், நேப்பர்வில் (இரண்டு பள்ளிகள்), மன்ஸ்டர், மில்வாக்கி, பியோரியா ஆகிய தமிழ்ப்பள்ளிகளிலிருந்து 170க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள், கடைச்சங்க காலந்தொட்டு நிலத்தை ஐந்தென பாகுபடுத்தி பண்போடு வாழ்ந்த தமிழர் வாழ்வையும், தமிழ் வளர்த்த அறிஞர் பலரையும் நேரில் பார்க்க வைத்தனர். இந்திய சுதந்திர நாட்களில் நாட்டுக்குத் தம்மையீந்த தமிழகப் போராளிகளை மீண்டும் நினைவூட்டினர் நேப்பர்வில் பள்ளி மாணாக்கர்கள். இளமை மாறாத தமிழ், தமிழ், தமிழர் கண்ட வாழ்வுத் திறன்கள், தமிழ் மாதங்களின் சிறப்புக்கள் என்று நமது பாரம்பரியத் தொன்மங்களைக் கண்முன் நிறுத்திய நிகழ்ச்சிகளையும் பாராட்டியாக வேண்டும்.

பாரதியின் பாடல்கள், சிங்கத்தின் வீட்டில் கொண்டாட்டம் (நாட்டிய நாடகம்), எங்கள் வீட்டில் தொலை காட்சி, தொலைந்துவிட்ட காட்சி (இந்த நாடகத்தைப் பார்க்க: ), விவசாயத்தின் அருமை யாவும் இளையோரின் தமிழ் மற்றும் கலைத் திறமையின் வெளிப்பாடு. திருக்குறள் கூறல், நடிப்பில் சொல் கண்டு எழுதல், எழுத்தைச் சொல், சொற்றொடர் என மாற்றல், சொற்சிலம்பம் சொல் தொடர்தல், குறள் அதிகாரப் பொருளுணர்ந்து, சிறுகதை வடித்தல், பழமொழி காணல் ஆகிய திறன்களுக்கான போட்டிகளில் வென்றோருக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நூற்றுக் கணக்கான குறள்களைப் பிழையின்றிக் கூறிப் பரிசுகள் பெற்ற நித்தின் சுப்பிரமணி (11 வயது), ரோஹித்தையும் (10 வயதுக்குக் கீழ்) இருவரையும் குழுமியிருந்தோர் வியந்து பாராட்டினர். இறுதியில் சாம்பர்க் தமிழ்ப்பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் முரளி நன்றி கூறினார்.

வ.ச. பாபு,
சிகாகோ, இல்லினாய்

© TamilOnline.com