திருப்பதி பீமாஸ்: டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுடன் சந்திப்பு
ஏப்ரல் 15, 2013 அன்று பத்மவிபூஷண் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா அவர்களைச் சந்தித்து உரையாட மில்பிடாஸில் திருப்பதி பீமாஸ் உணவக உரிமையாளர்கள் ஓர் சிறப்பு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். பாலமுரளி கிருஷ்ணா, கலைமாமணி டாக்டர் சரஸ்வதி மற்றும் குழுவினருக்கு உணவக உரிமையாளர்கள் செல்வராஜ், சுரேஷ், அவர்களின் துணைவியார்கள், நண்பர்கள் பிரபு மற்றும் பிரசாத் பொன்னாடை போர்த்தி மலர்ச்செண்டுடன் வரவேற்றனர்.

இசைப்பிரியர்கள் பாலமுரளி கிருஷ்ணா அவர்களிடம் சுவையாக உரையாடினர். நிகில் சிவகுமார் என்ற சிறுவன் அவர் பாடிப் பிரபலமடைந்த "சின்னக் கண்ணன் அழைக்கின்றான்..." என்ற திரைப் பாடலைப் பாடி, அவர் வாயாலேயே 'இளம் பாலமுரளி கிருஷ்ணா' என்று பாராட்டுப் பெற்றான். இசை என்பது பாடுவது மட்டுமல்ல, இசை என்பது வாழ்க்கை (Music is Life) என்றதோடு ஸ்ருதி, லயம் என்ற இசையின் இரண்டு வார்த்தைகளைத் தழுவியதே வாழ்க்கை என்ற தத்துவத்தை எடுத்துக்காட்டுகளுடன் கூறி வியக்க வைத்தார். மற்றொரு ரசிகை அவர் பல வருடங்களுக்கு முன்பு டி.வி. பேட்டி ஒன்றில் விஜயவாடாவுக்கும் சென்னைக்கும் இடையே உள்ள அனைத்து ரயில்நிலையங்களையும் கூறியதை நினைவுபடுத்தி, இப்பொழுதும் அதேபோல் கூறமுடியுமா என்று கேட்க, தமது எண்பத்திரண்டாம் வயதில் கடகடவென்று பெயர்களைக் கூறி அசர வைத்தார். புதுமையான ராகத்தில் தாம் வடிவமைத்த "ஸ்த்தி தேகி மே…" என்ற பாடலைப் பாடி அனைவரையும் இன்ப வெள்ளத்தில் ஆழ்த்தினார். இறுதியில் திருப்பதி பீமாஸ் உணவகம் வழங்கியஅறுசுவை உணவுடன் நிகழ்ச்சி நிறைவெய்தியது.

வெங்கடேஷ் பாபு,
மில்பிடாஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com