பி.பி. ஸ்ரீனிவாஸ்
பின்னணிப் பாடகரும் கவிஞருமான பி.பி. ஸ்ரீனிவாஸ் (83) சென்னையில் காலமானார். பிரதிவாதி பயங்கரம் ஸ்ரீனிவாஸ் என்றழைக்கப்பட்ட பி.பி. ஸ்ரீனிவாஸுக்கு சிறுவயது முதலே பின்னணிப் பாடகராகும் லட்சியம் இருந்தது. குடும்ப நண்பர் ஏமனி சங்கர சாஸ்திரி மற்றும் பி.எஸ்.கலான் உதவியால் 1952ல் வெளியான 'மிஸ்டர் சம்பத்' ஹிந்திப் படத்தில் சில துக்கடா வரிகளைப் பாடியதில் ஸ்ரீனிவாஸின் திரைப்பட அரங்கேற்றம் நிகழ்ந்தது. 'ஜாதகம்' மற்றும் சில படங்களில் பாடினாலும் பி.பி. ஸ்ரீனிவாஸ் என்ற அடையாளத்தைக் கொடுத்தவை அடுத்த வீட்டுப் பெண் படத்தில் இடம்பெற்ற "கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே...", பாவ மன்னிப்பில் இடம்பெற்ற "காலங்களில் அவள் வசந்தம்" பாடல்கள்தாம். ஜெமினி கணேசனுக்கு இவர் குரல் மிகப் பொருத்தமாக இருக்கவே அவருக்காக "நிலவே என்னிடம் நெருங்காதே", "வளர்ந்த கதை மறந்து விட்டாள்", "சின்னச் சின்னக் கண்ணனுக்கு", "நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்" போன்ற பாடல்களைப் பாடி நிலையான இடத்தைப் பெற்றார். குறிப்பாக எஸ். ஜானகியுடன் இவர் பாடிய "பொன்னென்பேன் சிறு பூவென்பேன்", "தென்னங்கீற்று ஊஞ்சலிலே" போன்ற பாடல்கள் காலத்தால் அழியாதவை.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காளி, மராத்தி, கொங்கணி எனப் பன்னிரண்டு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார் ஸ்ரீனிவாஸ். பல மொழிகளில் கவிஞரும் எழுத்தாளரும் கூட. ஒன்றரை லட்சம் கவிதைகளுக்கு மேல் எழுதியிருக்கிறார். 'சந்தஸ்', 'ஸ்ரீனிவாச காயத்ரி விருத்தம்', 'பிரணவம்' எனப் பல நூல்களின் ஆசிரியர். வெங்கடேஸ்வர சுப்ரபாதம், ராகவேந்திர சுப்ரபாதம், முகுந்தமாலை, சாரதா புஜங்க ஸ்தோத்திரம் என பக்திப் பாடல்களும் நிறையப் பாடியுள்ளார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்ற இவர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் தலைவராகப் பதவி வகித்திருக்கிறார். இவருக்கு ஜானகி என்ற மனைவியும், நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். ராம் நாராயண், கௌரி ராம் நாராயணனால் இவரது வாழ்க்கை வரலாறு எழுதப்பட்டு, அது வெளியாகச் சில நாட்களே இருந்த நிலையில் அவர் மரணமெய்தியது சோகமானது. பி.பி.ஸ்ரீனிவாஸ் தென்றலுக்கு (ஜனவரி, 2004 இதழ்) வழங்கிய சுவாரஸ்யமான நேர்காணலைப் படிக்க



© TamilOnline.com