புறநானூறு மாநாடும் போட்டிகளும்
ஆகஸ்ட் 31, 2013 அன்று வாஷிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கமும், வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் (FeTNA) இணைந்து நடத்தும் புறநானூறு பன்னாட்டு மாநாடு நடைபெறவுள்ளது. ஒரு மேலைநாட்டில் இது முதல் முயற்சியாகும். வாஷிங்டன் வட்டாரத்தில் 'தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்' ஏறக்குறையப் பத்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதை வழிநடத்தி வரும் டாக்டர். பிரபாகரன் இந்த மாநாட்டையும் தலைமைப் பொறுப்பேற்று நடத்துகிறார். முன்னதாக இந்த ஆய்வுக் கூட்டத்தின் சார்பில் 2005ம் ஆண்டு திருக்குறள் பன்னாட்டு மாநாடு நடைபெற்றுள்ளது.

“2000 ஆண்டுக்கு முற்பட்ட தமிழர் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை உள்ளடக்கிய புறநானூறு குறித்து விவாதித்தோம். விளக்கவுரைகள் புத்தகங்களாகவும், வலையகத்திலும் வெளியிட்டுள்ளோம். புறநானூறு ஆய்வு நிறைவு பெறுவதையொட்டி, பன்னாட்டு மாநாடு நடத்த உள்ளோம். இன்றைய இளைய தலைமுறையினர் பண்டைத் தமிழர் குறித்து அறியவேண்டும் என்ற நோக்கத்தில், புறநானூறு தொடர்பான போட்டிகளை நடத்துகிறோம். போட்டியில் பங்கேற்போர் தேவையான குறிப்புகளை www.puram400.blogspot.com என்ற வலைப்பக்கத்தில் பெறமுடியும்” என்று கூறும் பிரபாகரன் கணினித்துறையில் வல்லுனராக அமெரிக்காவில் நாசா மற்றும் அமெரிக்க ராணுவத்துறையில் பணியாற்றிவர்.

மாநாட்டை ஒட்டிப் புறநானூறு பற்றிய கட்டுரை, வினாடி வினா, இசை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெறுகின்றன. திறானாய்வுக் கட்டுரைகளைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏப்ரல் 30ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். முதல் பரிசு 1000 டாலர், இரண்டாம் பரிசு 500 டாலர் வழங்கப்படும். வட அமெரிக்காவில் 9 முதல் 12 வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் பங்கு பெறுக்கூடிய வினாடி வினா போட்டியும் நடைபெற உள்ளது. அமெரிக்கத் தமிழ் கல்விக் கழகம், தமிழ்ப் பள்ளிகள் மூலம் தகுதிப்போட்டி நடத்தி, அதில் வெற்றி பெற்றவர்கள் இறுதிப்போட்டியில் பங்கேற்பர். முதல் பரிசு 500 டாலர், இரண்டாம் பரிசு 250 டாலர்.

புறநானூறு இசை மற்றும் ஓவியப் போட்டிகளுக்கும் முறையே முதல்பரிசு தலா 500 டாலர், இரண்டாம் பரிசு 250 டாலர் வழங்கப்படும். தவிர, பெரியவர்களுக்கான வினாடி வினாப் போட்டியும் உண்டு. போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் கூடுதல் தகவலறிய: www.classicaltamil.org

© TamilOnline.com