தாயைப் பெற்ற குழந்தை
விமான நிலையம் முழுக்க
மனித ஈக்கள் அங்குமிங்குமென
வருவதும் போவதுமாய் இருக்க
அடைத் தேனீக்கள் போல்
விமான உள்புகுமிடங்களில்
குப்பை குப்பையாய்க் கூட்டம்!
யார் கவனித்தார்கள் அவளை?

இரண்டாம் தூணில் சாய்ந்து
அலுங்கிக் குலுங்கி
கண்ணீர் உகுக்குமந்த
ஹிஸ்பானிய இளம்பெண்ணை!

அண்டி அவளைக் கேட்கலாமா?
நூறோடு நூற்றொன்றாய்
நாமும் கடந்து சென்றுவிடலாமா?

மனத்துக்குள் நிகழ்ந்த
சஞ்சலப்புயல் ஓயந்தபின்
ஏங்க, உங்களுக்கு உதவி ஏதும்?
சென்று வினவியதற்கு
உகுத்த கண்ணீர் துடைத்து
அமைதியாய் மறுமொழிந்தாள்
நன்றி! நீங்கள் கவலைப்படாதீர்கள்!
யாரோ வீசிச்சென்ற இக்குழந்தையை
தத்தெடுத்து வளர்க்கும் என்னை
இன்று
இப்போதுதான்
முதன்முதலாய்
மாமி மாமி எனச்சொல்லி
அழைக்கத் துவங்கியிருக்கிறாள்!

ஏதுமறியாப் புன்னகையுடன்
எங்களைப் பார்த்துச் சிரித்த
அக்குழந்தையின் கண்களில்
தாயொன்றின் பிரசவம்!

பழமைபேசி,
கோலியர்வில், டென்னசி.

© TamilOnline.com