வளைகுடாப் பகுதியில் தமிழர் திருநாள்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் முதன்முறையாக இந்திய குமுகாய மையத்துடன் இணைந்து 'தமிழர் திருநாள்' மற்றும் பொங்கல் விழா நிகழ்ச்சியை நடத்தியது. ஜனவரி 21, 2006 அன்று மில்பிடஸ் இந்திய குமுகாய மைய அரங்கில் நடந்த இந்த விழா சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், வடை, இட்டிலி கொண்ட நண்பகல் விருந்துடன் தொடங்கியது. தமிழரல்லாத பல இந்தியர்களும் கூட வரிசையில் நின்று பொங்கல் சாப்பிட்டனர்.

விருந்தினர்களைத் தமிழ் மன்றத்தலைவர் தில்லை குமரனும், இந்தியக் குமுகாய மையத்தின் விஷ்ணு சர்மாவும் வரவேற்றனர். இந்தியத் துணைத் தூதரகத்தின் விஜயன் மச்சிங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழரல்லாத பிற மொழியினருக்கும் தமிழ் வரலாறு, பண்பாடு, நாகரிகத்தைச் சித்தரிக்கும் விதமாக தமிழ் மன்றம் ஓர் 20 நிமிடக் குறும்படத்தைத் தொகுத்து வழங்கியது.

பர்க்கெலி கலி·போர்னியா பல்கலையின் தமிழ்ப்பீடப் பேராசிரியர் ஜோர்ஜ் ஹார்ட் நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார். ஹார்வர்ட் பல்கலையில் சமஸ்கிருதம் பட்டம் பெற்ற பேரா.ஹார்ட் தன்னை இந்தியாவின் மற்றுமொரு செம்மொழியான தமிழ் ஈர்த்ததைப் பற்றிக் குறிப்பிட்டார். பண்டைய தமிழ் இலக்கியம் ஏனைய இந்திய மொழிகளைப் போல் சமஸ்கிருதத்திலிருந்து இரவல் வாங்காமல்
கொண்டிருந்த தனித் தன்மையும் அதன் செவ்விலக்கிய மரபும் தன்னைக் கவர்ந்தது என்றார் அவர். பண்டைய தமிழில் இருந்த பல கூறுகள் சமஸ்கிருதத்தில் இல்லாதவை ஆனால் இந்திய மரபில் காணப்படுபவை. வங்க அறிஞர் எஸ். கே. சட்டர்ஜி இந்திய மரபின் 70% திராவிட மரபைச் சார்ந்தவை என்று கணித்ததாக நினைவு; அது போல எது எத்தனை பங்கு என்று தான் சொல்ல விரும்பவில்லை என்றாலும், இந்தியா மரபில் திராவிட, தமிழ் மரபின் பங்கு மிக முக்கியமானது என்பதைக் குறிப்பிட விரும்புவதாகக் கூறினார் பேரா. ஹார்ட்.

தற்கால இந்திய மரபு, தமிழ் மரபு, வேதிய சமஸ்கிருத மரபு, வேதத்துக்கு முற்பட்ட வட இந்திய மரபு என்ற முப்பெரும் மரபுகளின் சங்கமம் என்ற பேரா. ஹார்ட், சில நேரத்தில் ஒரு சில தமிழர்கள் தமிழின் தனித் தன்மையை வலியுறுத்தி இந்திய மரபி லிருந்து வேறுபடுத்திக் காட்டுவதும் சரியல்ல என்றார். தமிழும் சமஸ்கிருதமும் பல கருத்து களைப் பரிமாறிச் செழித்து வளர்ந்தவை. எவ்வாறு மேற்கத்திய நாகரீகத்தின் பல மொழிகள் லத்தீனம், கிரேக்கம் மரபு களிலிருந்து வளர்ந்தனவோ அதே போல் இந்திய மொழிகள் பலவும் சமஸ்கிருதம், தமிழ் என்ற இரண்டு செம்மொழி மரபுகளால் செழித்து ஓர் இந்திய மரபை உருவாக்கின என்றார் ஹார்ட். இந்தப் பண்பாட்டு ஒற்றுமையை மறந்து விடக் கூடாது என்று பலத்தை கரவொலிக் கிடையே குறிப்பிட்டார்.

பேரா. ஹார்ட் பேச்சைத் தொடர்ந்து பாகீரதி சேஷப்பன், ஜெகதா குழுவினர் வீணையிசையோடு கலைநிகழ்ச்சிகள் தொடங்கின. குழந்தைகளும் இளைஞர் களும் மரபு நடனங்கள், நாட்டுப்புற நடனங்கள், திரையிசை நடனங்கள் என்று பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். பல்கலை வித்தகர் ராஜாமணியின் மெல்லிசையோடு விழா நிறைவுபெற்றது.

மேலும் விவரங்களுக்கு: www.bayareatamilmanram.org

© TamilOnline.com