பரதநாட்டியம்: ஸ்வாதி ரமேஷ்
ஜனவரி 19, 2013 அன்று மவுண்டன் வியூ கபர்லி தியேட்டரில் ஸ்வாதி ரமேஷின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இயல்பு வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ளவர்கள் மருத்துவ உதவிக்காக 'ஜீனா' அமைப்பு நிதி திரட்டுவதற்காக இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. நடராஜ புஷ்பாஞ்சலியுடன் தொடங்கி, நாட்டையில் ஊத்துக்காடு வேங்கடகவியின் கணபதி வந்தனத்தில் வளர்ந்தது. 'ஸ்வாமியை அழைத்து ஓடிவா' எனும் ராகமாலிகை வர்ணத்துக்கு சிறந்த முகபாவத்துடன் ஸ்வாதி அபிநயித்தது சிறப்பு. 'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'ஸ்ரீசக்ர ராஜ', தனஸ்ரீ ராகத்தில் ஸ்வாதி திருநாள் தில்லானா என்று நிகழ்ச்சி ராஜநடை போட்டது.
நிறைவாக ஆஹிர் பைரவில் 'அந்த மயில் தாளங்கள் போட' எனும் பாடலில் கண்ணனின் குழலிசைக்கேற்ப மயில் தாளம் போட, கன்றுகள் சாமரம் வீச, கையில் தாளத்துடன் மனம் எதிலும் லயிக்காமல் “கோவிந்த கோவிந்த ராதே முகுந்தா” எனும் நாமத்துடன் முடித்த பாடலில் பக்தி பாவத்துடன் அபிநயித்து ஸ்வாதி ரமேஷ் நெகிழ வைத்தார். பாடல்களின் பொருளைப் புரிந்து அனுபவித்து ஆடியது ஸ்வாதியின் சிறப்பம்சம். பெங்களூரில் குரு பத்மினி ராமச்சந்திரன், விரிகுடாப் பகுதியில் குரு மதுரா ஸ்வாமிநாதன் ஆகியோரிடம் நாட்டியம் பயின்றவர் ஸ்வாதி.

சீதா துரைராஜ்,
பாலோ ஆல்டோ, கலிஃபோர்னியா

© TamilOnline.com