உயிர்ப்பூ நான்!
உனதருகில் இல்லாத
நொடிகள் எல்லாம்
முட்களாய் நெஞ்சத்தில்
தைத்த விதம்
விவரிக்க எண்ணாமலே
உன்னிடத்தில்
விழியகல விவரித்தேன்....

பொறுத்திருந்து கேட்டே நீயும்
பொறுமையாய் சொல்லிச் சென்றாய்
நித்தம் நினைவுகளில்
நிறைந்திருக்கும் நம் காதல்
நீ சொல்லித்தானா
நெஞ்சம் நிறைக்கப் போகிறதென்று....

சொல்லாமல் பூட்டி
வைத்த பூரணத்துவம்
என்னைக் கேளாமல்
நெஞ்சில் படரும் விதம்
வார்த்தைக்குள் அடைத்து வைக்க
வியாபாரம் அல்லவே என்றாய்....

புரிந்தும் புரியாததுபோல்
உள்ளம் தெரிந்தும்
தெரியாது போல்
உள்ளடக்கிய உணர்வோடு
உன்னுடன் இசைந்து நின்றேன்....

ஆதிமுதல் அந்தம்வரை
உன்னில் பாதியாய்
பதிந்திருந்தேன்
உணர்ந்து உருகும் உள்ளம்
உயிர்ப்பில் லயித்த எண்ணம்
உள்ளார்ந்த அமைதியில்
ஒன்றும் பேசாதிருந்தேன்....

தெளிவின் உச்சத்தில் நீ
தெரிந்தும் குழப்பத்தில் நான்
அறிவினை உணர்வு வெல்ல
அறிந்தும் அறியாச்
சிறுமிபோல் ஆதாரமாய்
உன்னைத் தொற்றி நின்றேன்....

தகிக்கும் கோபம் உன்னுள்
அதைத் தணிக்கும்
தாபம் என்னுள்....

நிறைந்து நிற்கும்
நிதர்சனம் நீ
உன்னுள் உறைந்திருக்கும்
உயிர்ப்பூ நான்!

ஆனந்தி சுப்பையா

© TamilOnline.com