எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்
உலகெங்கும் சீடர்களைக் கொண்டவரும், பிரபல வயலின் இசைக் கலைஞருமான எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் (82) சென்னையில் காலமானார். பத்மவிபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ, சங்கீத கலாநிதி உள்ளிட்ட உயரிய விருதுகளைப் பெற்ற இவர், “எம்.எஸ்.ஜி.” என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். சிறுவயதிலேயே வயலின் கற்றுக்கொண்டு மேடைகளில் இசைக்கத் தொடங்கினார். ஆரம்ப காலத்தில் இசை மேதைகள் பலருக்கும் பக்க வாத்தியம் வாசித்துப் புகழ்பெற்றார். பிற்காலத்தே தனக்கென ஒரு தனிப்பாணியை உருவாக்கி வயலின் இசையில் முத்திரை பதித்தார். சிறந்த சிஷ்ய பரம்பரையை உருவாக்கிய பெருமை இவருக்குண்டு. பிரபல வயலின் இசைக் கலைஞர் எம். நர்மதா இவரது மகள். 'தமிழிசை மூவர்' போல டி.என்.கிருஷ்ணன், லால்குடி ஜி. ஜெயராமன், எம்.எஸ். கோபாலகிருஷ்ணன் மூவரும் 'வயலினிசை மூவர்' என்று போற்றப்பட்டனர். இசையில் 75 வருட அனுபவம் கொண்டவர் எம்.எஸ்.ஜி. இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், நர்மதா, லதா என இரு மகள்களும் சுரேஷ் என்ற மகனும் உள்ளனர். வயலின் மேதை எம்.எஸ்.ஜி.க்குத் தென்றலின் அஞ்சலி.



© TamilOnline.com