லாஸ் ஏஞ்சலஸில் தியாகராஜ உத்ஸவம்
ஜனவரி 21, 2006 அன்று காலை லாஸ் ஏஞ்சலஸில் உள்ள மாலிபு கோவிலில் ஸ்ரீ தியாகராஜ உற்சவம் கொண்டாடப் பட்டது. மாலிபு கோவில் கலாசாரத் தலைவர் கிரிதர் வரவேற்புரை வழங்கினார்.

கானசரஸ்வதியின் ஒருங்கிணைப்பில் ஆராதனை நடந்தது. இசைக்கலைஞர்கள் தியாகராஜரின் பாடல்களுடன் இதர வாக்கேயக்காரர்கள் பாபநாசம்சிவன், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, புரந்தரதாஸர், அன்னமாசாரியார், ஸ்வாதி திருநாள், முத்தையாபாகவதர், கான சரஸ்வதி, பாரதியார், மைசூர் வாசு தேவாசாரியார் ஆகியோர் இயற்றிய பாடல்களைப் பாடியும், கருவிகளில் இசைத்தும் ரஸிகப் பெருமக்களைப் பரவசத்தில் ஆழ்த்தினர். ஸ்ரீனிவாசன், ராம்ஜி, வெங்கடாசலம் ஆகியோர் மிருதங்கம் வாசித்தனர்.

பஞ்சரத்ன கீர்த்தனைகளுடன் தொடங்கியது ஆராதனை. காதுக்கு இனிய விருந்தாய் அமைந்தது 'வாத்ய விருந்து'. இராமரின் நிந்தா ஸ்துதி பாடலான 'இது சரியோ முறையோ ஜானகி ரமணா' பாடலை சங்கீதா கீதா ராகவன் வீணையில் வாசித்தார். கோபி, சௌம்யா, சங்கீதா, கிருஷ்ணா ஸம்பத், சுபா, கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் ஆகியோர்ஹிந்தோளவசந்த ராகத்தில் 'ராரா சீதா ரமணீ மனோஹரா' பாடலைப் பாடினர்.

மாலிபு வெங்கடேசப் பெருமாளின் எழில் கோலத்தை பாடலில் வடித்த கானசரஸ்வதி 'பூலோக வைகுண்ட மாலிபு வாசா' அதைச் சக்ரவாக ராகத்தில் பாடி மெய்சிலிர்க்கச் செய்தார். வாய்ப்பாட்டுகள் இரண்டு முடிந்ததும் வாத்ய இசை இடம்பெறுமாறு அமைத்திருந்த பாங்கு அருமை. கிரண் ஆத்ரேயா, சிவா ராமமூர்த்தி, அனு மூர்த்தி ஆகியோரின் வயலின் இசை கேட்டோரைப் பேரானந்தத்தில் ஆழ்த்தியது.

ஆசான் பாபு பரமேஸ்வரின் கீபோர்ட்டு சீடர்கள் ஜோஸப் பூழிக்கலா, அதிதி விஜயராகவன், விஜயா கிருஷ்ணன், தேஜஸ் பெருவம்பா, குரு கீதாபென்னட் அவர் களின் வீணை சீடர் கஸ்தூரி ஜீவபிரகாஷ், குரு முரளி கிருஷ்ணா அவர்களின் வீணை/கீபோர்ட்டு சீடர்கள் ஜனகன், விதுரன், வர்ஷிணி, அபிலாஷ், அஞ்சனா, அசோக், பரத், பஸந்த், திவ்யா, இளங்கோ, குரு, ரக்ஷித், சஷாங், விக்னேஷ் ஆகியோரின் இசை தேவாமிர்தம்.

கானசரஸ்வதி, திருவையாறு கிருஷ்ணன், பத்மா குட்டி, கல்யாணி சதானந்தம், கல்யாணி வீரராகவன், வஸந்தா பட்சு, ரோஸ் முரளிகிருஷ்ணா, சுனந்தா சந்த்ர மௌலி ஆகியோர் தம் சீடர்களுடன் அணிதிரண்டு காலை 11:15 தொடங்கி இரவு 7:30 மணிவரை இடைவிடாது இசைமழை பொழிந்தனர்.

அருண் சங்கரநாராயணன் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவு பெற்றது.

தமிழ்ச்செல்வி

© TamilOnline.com