அபிநயா: 'காந்தி' நாட்டிய நாடகம்
2012 டிசம்பர் 17,18 தேதிகளில் அபிநயா நாட்டிய நிறுவனம் வழங்கிய இலையுதிர்காலப் பிரதான தயாரிப்பான 'காந்தி'யைக் காண வந்தவர்களின் தீர்ப்பு "இது மிக அழகு, சிறப்பு, மறக்க முடியாதது" என்பதே. சான் ஹோசே மெக்சிகன் ஹெரிடேஜ் பிளாசாவில் நடந்தேறியது இந்த நாட்டிய நாடகம்.

இதில் காந்தியாக நடித்த மைதிலி குமாரின் தலைமையில் ஆடிய நாட்டியக் கலைஞர்கள் பாரம்பரிய நடனம், உடை, இசை, மற்றும் தனித்துவமான நடன அமைப்பில் காந்தியின் வாழ்க்கைச் சரித்திரத்தைச் சித்திரித்தார்கள். காந்தியின் தத்துவங்களையும் பெருமையையும் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர், நெல்சன் மேன்டலா, சீசர் சாவிஸ், வின்ஸ்டன் சர்ச்சில், கார்ல் சாகன் ஆகியோரின் வார்த்தைகளில் அறிமுகப்படுத்தித் துவங்கிய நிகழ்ச்சி காந்தியின் வாழ்க்கைச் சரித்திரத்தைக் கதையாகச் சொல்லி வளர்ந்தது. மனுபென்னின் குரலில் காந்தியின் ஆன்ம உணர்வைத் தூண்டிய சந்தர்ப்பங்கள், அவரை உலக மனிதராக ஆக்கிய சம்பவங்கள் என வடிவமைத்திருந்தனர்.

நேரிடை வாத்தியக் குழுவுடன் கூடிய பலமொழி வாய்ப் பாட்டு உன்னதமான ரசானுபவத்தை அளித்தது. கலை இயக்குனர் மைதிலி குமார், துணை கலை இயக்குனர் ரசிகா குமார் ஆகியோரின் நடன அமைப்பு திறம்படப் பல கலையம்சங்களை ஒருங்கிணைத்துத் தந்தது.

2013ல் ப்ரீமான்ட், கலிபோர்னியாவில் தொடங்கி, அடுத்த மாதங்களில் இந்நிறுவனம் பல்வேறு இடங்களில் 'காந்தி' நாட்டிய நாடகத்தைச் செய்யத் திட்டமிட்டுள்ளது. உங்கள் இடத்தில் ஒரு காட்சியை நடத்துவது எப்படி என்ற தகவலுக்கும், நிகழ்ச்சி அட்டவணைக்கும் தொடர்பு கொள்க:

மின்னஞ்சல்: abdanceco@gmail.com
வலையகம்: www.abhinaya.org

ரவி ரங்கநாதன்,
சான் ஹோசே, கலிஃபோர்னியா

© TamilOnline.com