லாஸ் ஏஞ்சலஸ்: ஸ்வரமஞ்சரி
டிசம்பர் 16, 2012 அன்று சிமி வேல்லி சீனியர் சென்டர் அரங்கில், ஸ்வரமஞ்சரி இசைப்பள்ளி ஓர் இன்னிசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. சங்கரி செந்தில்குமார் தனது மாணவர்களுடன் வழங்கிய மூவர் தேவாரப் பண்ணிசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. பின்னர் குரு இந்து நாகராஜன் 'ஈசனும் இசையும்' என்ற தலைப்பில் தனது மாணவர்களுடன் கீர்த்தனங்களைப் பாடியது மார்கழி மாதப் பிறப்புக்குப் பொருத்தமாக அமைந்தது. தொடர்ந்து குரு சுபா நாராயணன் மற்றும் குழுவினர் 'ராம பக்தி சாம்ராஜ்யம்' என்னும் தலைப்பில் பாடினர். இறுதியாக குரு சசிகிரண் அவர்களின் மாணவர்கள் 'கர்நாடக சங்கீதத்தில் நவரசம்' என்ற தலைப்பில் கீர்த்தனங்களை பாடினர். வந்திருந்தோர் திருவையாறில் இருந்த உணர்வை நிகழ்ச்சி தந்ததாகத் தெரிவித்தனர். ஏற்பாடுகளை குரு இந்து நாகராஜன் செய்திருந்தார்.

ராமசுப்ரமணியம்,
சிமி வேல்லி, கலிஃபோர்னியா

© TamilOnline.com