அபிராமி கலை மன்றம்: விமலாவின் ஒளிவிழா
நவம்பர் 3, 2012 அன்று சான்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர் தியேட்டரில் 'அபிராமி கலை மன்றம்' வழங்கிய 'விமலாவின் ஒளிவிழா' நடந்தேறியது. பாகீரதி சேஷப்பன் எழுதி, சுகி சிவா இசையமைத்துப் பாடிய தமிழன்னை வாழ்த்துடன் விழா துவங்கியது. தீபாவளிக் கனவுகளாக இந்தியாவின் தீபாவளிக் காட்சிகள், கரகாட்டம், சிலம்பாட்டம் அனைத்தும் மக்களைக் கவர்ந்தன. தள்ளுவண்டி வியாபாரி மேடையில் விற்றுக்கொண்டு வந்த வண்டி தத்ரூபமாக இருந்தது. கீர்த்தனா கணீரென்ற குரலில் பாடிய பாடல்கள் அருமை. விளக்கு நடனத்தை அன்னபூர்ணா அருமையாக வடிவமைத்திருந்தார். குழந்தைகள் நடுநடுவே வந்து சிரிப்பு வெடிகளை வீசிச் சென்றது சுவையான புதிய முயற்சி. அவர்கள் பேசிய தமிழ் கைதட்டலை அள்ளியது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக வந்தது சுகி சிவா அமைத்திருந்த ஒளிநடனம். ஸ்ரீதரன் மைனர் இசையமைத்திருந்தார். பாகீரதி சேஷப்பன் இயக்கத்தில், வேணு சுப்பிரமணியம் துணை இயக்கத்தில் அமைந்திருந்த இந்த ஒளிவிழா எல்லா வயதினரிடமும் பாராட்டுப் பெற்றது.

விசாலாட்சி,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com