பேரா. பிளேக் வென்ட்வர்த்துடன் சந்திப்பு
நவம்பர் 17, 2012 அன்று மதியம் ஃப்ரீமான்டில் பேரா. பிளேக் வென்ட்வர்த் தமது துணைவியாருடன் ஒரு விருந்தில் கலந்துகொண்டு, வளைகுடாப் பகுதி தமிழர்களைச் சந்தித்துப் பேசினார். (இவருடனான நேர்காணல் தென்றல் அக்டோபர், 2012 இதழில் வெளியானது. படிக்க: tamilonline.com). பெர்க்கலி பல்கலைத் தமிழ்த் துறையில் பேராசிரியராக இவர் செப்டம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார். பிளேக் தம்பதியர் இனிமையாகவும் எளிமையாகவும் பழகுகிறார்கள். தமிழில் சரளமாக அவர் பேசுவதைக் கேட்டு எல்லோரும் அதிசயித்தார்கள். கம்பராமாயணத்தின் ஒரு பகுதியைத் தான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வருவதுபற்றி பிளேக் மிக ஆர்வமாகப் பேசினார்.

இதுபோன்ற தமிழ் இலக்கியப் பொக்கிஷங்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் பொழுதுதான், அவற்றின் சிறப்புக்களை உலகோர் அறிவர் என்றார் அவர். பெர்க்கலி பல்கலையில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்குத் தயாராகி வரும் மாணவர்களைப் பற்றிப் பெருமையுடன் பேசினார்.

தமிழை முக்கியப் பாடமாக எடுக்காத பிற பிரிவு மாணவர்களும் சேர்ந்து படித்துப் பயனுறுவதற்காக, அடுத்த ஆண்டில் 'கல்வெட்டுக்கள்' என்ற சிறப்புப் பாடம் நடத்த இருப்பதாகத் தெரிவித்தார். நிகழ்ச்சியை சிவா சேஷப்பன் மற்றும் பாகீரதி சேஷப்பன் ஏற்பாடு செய்திருந்தனர். தமிழ் மன்றத் தலைவர் பிரபு உட்படப் பலர் பங்கேற்றனர். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பேரா. பிளேக் பதில் கூறினார்.

பாகீரதி சேஷப்பன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com