இதயத்தின் மிகைத்துடிப்பு (Tachycardia)
சாதாரணமாக மனித இதயத் துடிப்பு 60 முதல் 80 வரை இருக்க வேண்டும். அதிகம் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு இதயத் துடிப்பு குறைவாக இருப்பது சகஜம். ஆனால் வேறு சில காரணங்களால் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம். இதைப்பற்றி இங்கு பார்க்கலாம்.

மிகைத்துடிப்பு அறிகுறிகள்
1. படபட வென்று இதயம் துடிப்பது தெரிய வரலாம் (Palpitations)
2. நெஞ்சுவலி அல்லது மூச்சு வாங்கலாம்
3. தலைசுற்றுதல் போலத் தோன்றலாம்
4. வியர்வை பெருகலாம்

இந்த அறிகுறிகள் சில நிமிடங்கள் முதல் அரை மணி நேரம்வரை இருக்கலாம். அதிகத் தீவிரமானால் அல்லது தொடர்ந்து இருக்குமானால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.

காரணங்கள்
பயம் அல்லது மனக் கவலை அதிகமானால் இதயத் துடிப்பு அதிகமாகலாம். மன அழுத்தம் (anxiety/stress) காரணமாகப் படபடப்பு ஏற்படலாம். இதயத் துடிப்பு 100 அல்லது 120 வரை போகலாம். இது தற்காலிகமாக, ஒரு காரணத்தால் ஏற்படுவதால், அந்தக் காரணம் மறையும்வரை இருக்கக் கூடும். புதிய சூழ்நிலை, பரிட்சை, நேர்முகத் தேர்வு, மருத்துவ அலுவலகம் போன்ற இடங்கள் இந்தத் தற்காலிக படபடப்பை ஏற்படுத்தும். ஆனால் இவர்களுக்கு மேற்கூறிய தீவிர அறிகுறிகள் இருக்காது. படபடப்பை ஏற்படுத்தும் சூழல் நீங்கியதும் இதயம் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். அதிகமாகக் காபி அருந்துதல், புகைபிடித்தல், மது அருந்துதல் போன்றவையும் இதயப் படபடப்பை அதிகப்படுத்தலாம்.

இதய அடைப்பு அல்லது குறுக்குப் பாதை (Heart block or Accessory Pathway Arrythmia)
இதயம் இரண்டு விதமான வேலைகளைச் செய்கிறது. ஒன்று ரத்தத்தை உடலின் எல்லாப் பாகங்களுக்கும் செலுத்துவது. (Mechanical). இதில் கோளாறு ஏற்பட்டால் வருவதே மாரடைப்பு. மற்றொன்று மின்சாரத் தூண்டலால் துடிப்பது. (Electrical). இந்தத் துடிப்பு இயக்கத்தில் கோளாறு ஏற்பட்டால், ஒழுங்கற்ற துடிப்பு காணப்படும். இரண்டும் ஒரு சில காரணங்களால் பழுதடையலாம். பல வேளைகளில் துடிப்பது மட்டும் பழுதடையலாம். ஒரு சிலருக்குப் பிறந்தது முதலே இந்தக் கோளாறு இருக்கலாம். இளவயதினருக்கும் ஏற்படலாம். ஆண், பெண் எல்லோருக்கும் இது ஏற்படலாம். இதற்கு இப்போது மருத்துவத் துறையில் பல பரிசோதனைகளும் தீர்வுகளும் உள்ளன.

தைராய்டு கோளாறு இருப்பவர்களுக்கும் இதயத் துடிப்பு அதிகரிக்கலாம். உடலில் சில ரசாயனங்கள் அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தாலும் இது ஏற்படலாம். ரத்த அழுத்தம் மிகையானாலும் இதயப் படபடப்பு ஏற்படலாம்.

இதயத் மிகைத்துடிப்பு வகைகள்
இதயம் நான்கு அறைகள் கொண்டது. இதில் வலது மேலறையில் (Atria) உள்ள Sinus node என்ற பகுதி நமது இதயத் துடிப்பிற்கு தலைவன் போலச் செயல்படுகிறது. இந்தப் பகுதியில் மின் துடிப்பு ஆரம்பித்து, மற்ற அறைகளுக்கு ஒரு குறிப்பட்ட பாதையில் பரவும். இதற்கு ஒரு சில மணித்துளிகளே ஆகும். இது ஒருவழிப் பாதை. இந்தப் பாதை ஒரு சில ரசாயன மாற்றங்களால் நிகழ்வது.

ஒரு சிலருக்குப் பிறப்பிலிருந்தே வேறு குறுக்குப் பாதைகள் இருக்கலாம். ஆனால் இந்த ரசாயன மாற்றங்கள் அளவாக இருக்கும்போது குறுக்குப் பாதைகள் அடைக்கப்பட்டு விடும். உடலில் தண்ணீரின் அளவு குறைந்து போனாலோ அல்லது வேறு சில காரணங்களாலோ இந்தக் குறுக்குப் பாதை அடைப்பு நீங்கினால், இதயம் தாறுமாறாகத் துடிக்கலாம். இதற்கு Supraventricular Tachycardia (SVT) என்று பெயர். இது அடிக்கடி அல்லது எப்போதாவது ஏற்படலாம். ஆனால் ஒரு சில நிமிடங்களில் இதயம் அதை உணர்ந்து தானாகவே அந்தப் பாதையை அடைத்து சரியான பாதை வழியே செலுத்திவிடும். அவ்வாறு நிகழாது போனால் மருந்துகள் தேவைப்படும். மனத்தை ஒருமுகப் படுத்தும் தியானம், யோகம் போன்றவை உதவலாம்.

மூச்சடக்கிப் பெருமூச்சு விடுவது (Valsalva Maneuver), முகத்தில் குளிர்ந்த நீர் தெளிப்பது போன்ற தீர்வுகளை மருத்துவர் ஆலோசனைப்படி செய்தால் இந்த குறுக்குப் பாதை செயல்பாட்டைக் கட்டுப்படுத்தலாம். குறுக்குப் பாதைகளில் பலவகைகள் உண்டு. துடிப்பின் தீவிரம், முறை, எண்ணிக்கை போன்றவை வகைக்கு வகை வேறுபடும். இப்போது பரிசோதனை மூலம் வகையைக் கண்டறிய முடியும். ஒரு சிலருக்கு ரத்த அழுத்தம் குறைக்கும் மருந்துகள் கொடுக்கப்படலாம். இவை இதயத் துடிப்பைக் குறைக்க வல்லன. அடிக்கடி இப்படி ஏற்படுமேயானால் இவர்களுக்கு ‘Ablation’ என்று சொல்லப்படும் சிகிச்சை முறை தேவைப்படலாம்.

இதைத் தவிர இதய மேலறை உதறல் துடிப்பு (Atrial Fibrillation) என்று ஒரு கோளாறு உள்ளது. இது பெரும்பாலும் வயதானவர்களுக்கு ஏற்படும். இவர்களுக்கு இரத்த அழுத்தம், கொழுப்பு போன்றவை இருக்கலாம். மாரடைப்பும் இருக்கலாம். இது சற்றே தீவிரமான துடிப்பு நோய். இதனால் பக்கவாதம் ஏற்படலாம். இவர்களுக்கு இரத்த ஓட்டம் சீராக இருக்க மருந்து தேவைப்படும். இதைப் பற்றி விரிவாகப் பின்னர் பார்க்கலாம்.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்,
கனெக்டிகட்

© TamilOnline.com