அரங்கேற்றம்: நிகிதா சிவா
ஆகஸ்ட் 4, 2012 அன்று நிகிதா சிவாவின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் மலிபூவில் (கலிஃபோர்னியா) உள்ள ஸ்மதர்ஸ் அரங்கில் நடைபெற்றது. அபூர்வ வர்ணமாக ஜம்ப தாளத்தில் கன்னட ராகத்தில் பாடிக் கச்சேரியை ஆரம்பித்தார் நிகிதா. 'நமாமி விக்ன விநாயகா' என்கிற கிருஷ்ணசாமி ஐயாவின் கிருதியுடன் தொடங்கி, தியாகராஜரின் நவரச கன்னடப் பாடலைப் பாடி, சியாமா சாஸ்திரியின் பைரவி ஸ்வர ஜதியைப் பாடியது சிறப்பு. காம்போதி ராகத்தை மனோதர்ம ராகமாக எடுத்துக் கொண்டு 'ஓ ரங்க சாயி' கீர்த்தனையை அனுபவித்துப் பாடினார். 'அருணாசல நாதம்' (சாரங்கா), 'முருகனின் மறு பெயர் அழகு' (பெஹாக்), 'ஹனுமனைத் தேடி' (ராகமாலிகை), ஸ்வாதித் திருநாளின் 'சலியே குஞ்சன்' (பிருந்தாவன சாரங்கா) ஆகியவற்றுக்குப் பின், குந்தலவராளியில் தில்லானாவையும் அழகுடன் பாடினார். யமன் கல்யாணியில் ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகள் இயற்றிய 'மைத்ரீம் பஜத'வைப் பாடி நிறைவு செய்தார். பக்கம் வாசித்த அருண் ராமமூர்த்தி (வயலின்), நிர்மல் நாராயணன் (மிருதங்கம்) இருவரும் உணர்ந்து வாசித்தனர். நிகிதாவின் வயதுக்கு அவர் பாடிய பாட்டுக்கள் எல்லாமே ரத்தினங்கள். இந்தக் கச்சேரியின் பெருமையில் குரு சங்கரிக்கு முக்கியமான இடமுண்டு. நிகிதாவின் அம்மா ஒரு பரதநாட்டியக் கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திரா பார்த்தசாரதி,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com