அரங்கேற்றம்: நிரஞ்சனா கண்ணன்
ஆகஸ்ட் 5, 2012 அன்று குரு கஸ்தூரி சிவகுமாரின் (International Academy of Indian Music) மாணவி நிரஞ்சனா கண்ணனின் கர்நாடக சங்கீத அரங்கேற்றம் கேன்டன், மிச்சிகனில் நடைபெற்றது. கல்யாணியில் அட தாள வர்ணத்துடன் ஆரம்பித்ததுமே அரங்கம் களை கட்டியது. நாட்டையில் ரக்ஷமாம், ரவிசந்த்ரிகாவில் மாகேலரா விறுவிறுப்பாகச் சென்றன. பந்துவராளியில் தியாகராஜரின் 'ரகுவரா', பைரவியில் தீட்சிதரின் 'பாலகோபாலம்' ஆகியவற்றுக்கு ஆலாபனை, நிரவல், கல்பனா ஸ்வரமும் ஒன்றை ஒன்று விஞ்சும்படியாக இருந்தது. காம்போதியில் பாடிய பல்லவி பிரமாதம். அடுத்தடுத்துப் பாடிய 'நாராயணா', நாராயண தீர்த்தரின் தர்பாரி கானடா ராக 'கோவர்த்தன கிரிதர', பெஹாக் கிருதி ஆகியவை சிறப்பாக இருந்தன. தனஸ்ரீ ராகத் தில்லானா, வினோத் சீதாராமனின் மிருதங்கத்தோடு எடுப்பாக இருந்தது. ஸ்ரீ ராகத்தில் திருப்பாவையுடன் கச்சேரி நிறைவடைந்தது.

ஜெய்ஷங்கர் பாலன் (வயலின்), வினோத் சீதாராமன் (மிருதங்கம்) நிகழ்ச்சிக்கு பக்க பலமாயிருந்தன. நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய நெய்வேலி சந்தானகோபாலன், நிரஞ்சனா ஓர் அனுபவமுள்ள பாடகியைப்போல் பாடினார் என்று பாராட்டிப் பேசினார்.

புவனா கிருஷ்ணன்,
கேன்டன், மிச்சிகன்

© TamilOnline.com